திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கம் அடுத்த வெள்ளியூர் ஊராட்சி பிள்ளையார் கோவில் தெருவில் சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அருள்மிகு செல்வவிநாயகர் திருக்கோவில் உள்ளது. இந்திருக்கோவிலுக்கு 1977-ம் ஆண்டு, 2000-ம் மற்றும் 2013-ம் ஆண்டு ஆகிய மூன்று முறை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இத்திருக்கோவிலில் பிரகார மூர்த்திகளான கனகதுர்க்கை அம்மன், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி, பக்த ஆஞ்சநேயர், நவகிரகங்கள் உள்ளிட்டவைகளை விழா குழுவினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் புனரமைத்தனர்.
இக்கோவிலின் மகா விழாவை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை முதல் மங்கள இசை, திருமுறை பாராயணம், விக்னேஸ்வர பூஜை, புண்ணியாவஜனம், மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், கோ பூஜை, சுதர்சன ஹோமம், நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, வேத பாராயணம், சூரிய பூஜை, விசேஷ திரவிய ஹோமம், லட்சுமி பூஜை உள்ளிட்டவை நடைபெற்றது,
நேற்று காலை கணபதி பூஜை, மகா பூர்ணாஹுதி, யாத்ரா தானம் உள்ளிட்டவை நடைபெற்றது. இதன் பின்னர் மங்கள வாத்தியம் முழங்க புனித நீர் அடங்கிய கலசங்கள் ஆலய அர்ச்சகர் சுரேஷ் ஐயர் தலைமையில் பிரகார புறப்பாடு நடைபெற்றது.
காலை 10 மணிக்கு விமான கோபுரம், மூலவர் செல்வவிநாயகர், கனகதுர்க்கை, வள்ளி தெய்வானை சுப்ரமணியர், பக்த ஆஞ்சநேயர், நவகிரகங்கள் உள்ளிட்ட தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தனர்.
இதன் பின்னர், மூலவருக்கு பால், தயிர், சந்தனம், தேன், மஞ்சள், பன்னீர், இளநீர், ஜவ்வாது, திருநீறு உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் கொண்ட சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பட்டாடையில், வண்ண மலர்களாலும், திரு ஆபரணங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து திருக்கோவில் வளாகத்தில் அனைத்து பக்தர்களுக்கும் மாபெரும் அன்னதான பிரசாதங்கள் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இரவு கணபதி சகஸ்ரநாம அர்ச்சனையும், புஷ்ப அபிஷேகமும் நடைபெற்றது.
இன்று முதல் 48 நாட்கள் மண்டலாபிஷேக நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. நிகழ்ச்சி காண ஏற்பாடுகளை
விழா குழுவினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் மிக சிறப்பாக செய்திருந்தனர்.




