சொத்து வரி பெயர் மாற்றம் செய்து தர ரூ. 20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய, நாமக்கல் மாநகராட்சி வருவாய் உதவியாளரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் சின்ன அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் விவசாயி தனது தந்தை பெயரில் இருந்த வீட்டை அவரது பெயருக்கு மாற்றி சொத்து வரி விதிக்கக்கோரி நாமக்கல் மாநகராட்சியில் கடந்த 2 வாரங்களுக்கு முன் விண்ணப்பம் செய்துள்ளார்.
அந்த விண்ணப்பத்தை பெற்ற வருவாய் உதவியாளர் சங்கர் (58) சொத்து வரி மாற்றம் செய்ய ரூ.20 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால்தான், பெயர் மாற்றம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
எனினும், லஞ்சம் கொடுக்க மனமில்லாத விவசாயி, இதுதொடர்பாக நாமக்கல் லஞ்ச ஒழிப்பு காவல்துறையில் புகார் செய்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அறிவுறுத்தலின்படி மாநகராட்சி அலுவலகம் சென்ற விவசாயி அங்கிருந்த வருவாய் உதவியாளர் சங்கரிடம் ரூ.20 ஆயிரத்தை வழங்கியுள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சங்கரை சுற்றி வளைத்து கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
தொடர்ந்து ரூ.20 ஆயிரம் லஞ்சத் தொகையை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




