நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த மார்ச் 1ல் பிறந்த, 8 குழந்தைகளுக்கு ராஜ்யசபா எம்.பி., ராஜேஷ்குமார் தங்க மோதிரம் அணிவித்து பரிசுப் பொருட்கள் வழங்கினார்.
தமிழக முதல்வரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலின் பிறந்த நாளான, மார்ச் 1ல், நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்படும் என, தி.மு.க., மாவட்ட செயலாளரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் அறிவித்திருந்தார்.
அதன்படி, நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. எம்.பி.,யும், மாவட்ட செயலாளருமான ராஜேஷ்குமார் தலைமை வகித்து, நாமக்கல் அரசு மருத்துவமனையில் பிறந்த, 5 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து பரிசுப் பொருட்கள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் எம்.எல்.ஏ., ராமலிங்கம், மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அதேபோல், அலங்காநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த ஒரு குழந்தை மற்றும் ராசிபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் பிறந்த, இரண்டு குழந்தைகள் என, கிழக்கு மாவட்டத்தில், மொத்தம் 8 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.




