திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடைபெற்ற அருணகிரிநாதர் திருவிழாவில் பட்டிமன்ற நடுவர் சொல்வேந்தர் சுகி.சிவம் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற பரிசுகள் மற்றும் சான்றுகள் வழங்கி பாராட்டினார்.
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோவிலில் அருளாளர் அருணகிரிநாதரின் 72ம் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவையொட்டி நூல் அரங்கத்தில் பி.டி.ஆர். கோகுல் குருக்கள் தொகுத்த திருமுருகனை குன்றில் கண்ட காட்சி, திருஅருணையின் தீபமகிமை என்ற 2 ஆன்மீக நூல்கள் வெளியிட்டு விழா நடந்தது. இந்த விழாவுக்கு வந்த அனைவரையும் விழாக்குழு தலைவர் தனுசு வரவேற்றார். பொருளாளர் பிச்சாண்டி விளக்கவுரையாற்றினார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தவெக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் பாரதிதாசன் ஆன்மீக நூல்களை வெளியிட அருணகிரிநாதர் மணி மண்டப தலைவர் சின்ராஜ், முன்னாள் அரங்காவலர் குழு தலைவர் டிவிஎஸ் ராஜாராம் ஆகியோர் முதல் பிரதி நூல்களை பெற்றுக்கொண்டனர்.
பின்னர் விழாக்குழு சார்பில் தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்க்கு வழங்கும் தமிழக அரசு விருதினை பாரதிதாசன் பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து அருணை ஆதிசைவர் நலச்சங்க செயலாளர் கீர்த்திவாசன் குருக்கள் வாழ்த்தி பேசினார். பி.டி.ஆர். கோகுல் குருக்கள் ஏற்புரை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து அருணகிரிநாதர் பாடல்களில் நயந்து இருப்பது இசையா இயலா என்ற தலைப்பில் நடைபெற்றபட்டிமன்றத்தில் சொல்வேந்தர் சுகி.சிவம் பேசினார். தொடர்ந்து அவர் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
இந்த விழாவில் கோவில் இணை ஆணையர் பரணிதரன், கமலாபீடம் நிறுவனர் சீதாசீனுவாசன், மாமன்ற உறுப்பினர் டாக்டர் பழனி, அருணை ஆதிசைவர் நலச்சங்க தலைவர் பி.டி. ரமேஷ்குருக்கள், அருளாளர் அருணகிரிநாதர் மண்டப செயலாளர் அமரேசன், கனரா வங்கி நாராயண மூர்த்தி, தொழிலதிபர் அருண் தனுசு , பாவலர் குப்பன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் அருளாளர் அருணகிரிநாதர் விழா அறக்கட்டளை துணை தலைவர்கள் இணை செயலாளர்கள், துணை செயலாளர்கள், சட்ட ஆலோசகர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள்,ஆன்மீக பிரமுகர்கள், விழாக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவையொட்டி அனைவருக்கும் அன்னதானமும் மற்றும் சுவாமி பிரசாதமும் வழங்கப்பட்டது. 3 நாட்கள் நடைபெறும் விழா இன்று நிறைவடையவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




