Close
செப்டம்பர் 20, 2024 3:33 காலை

உரிமம் பெறாமல் எலி விஷம் போன்ற பூச்சிக்கொல்லிகள் விற்பனை செய்தால் நடவடிக்கை: புதுகை ஆட்சியர் எச்சரிக்கை

புதுக்கோட்டை

உரிமம் இல்லாமல் எலி விஷம் பூச்சி கொல்லிகளை விற்றால் கடும் நடவடிக்கை

உரிமம் பெறாமல் எலி விஷம் போன்ற பூச்சிக்கொல்லிகள் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தற்கொலைகளினால் ஆண்டு ஒன்றுக்கு 15 முதல்16 ஆயிரம் வரையிலான மரணங்கள் ஏற்படுகின்றன. அதில் 10 முதல் 15 சதவிகிதத்தினர் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொள்கின்றனர். மீதமுள்ளோர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்கின்றனர்.

இதில், திருச்சி மண்டலத்தில், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் கடந்த மூன்று ஆண்டுகளில்  800 -க்கும் மேற்பட்டோர்  எலி பேஸ்ட்டை சாப்பிட்டு உயிரிழந்தனர் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில்,  மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்துக் கடைகளிலும் எலி விஷம், கரப்பான் கொல்லிகள், கொசுவிரட்டி போன்ற வீட்டுப் பயன்பாட்டுப் பூச்சிக்கொல்லிகளை விற்பனை செய்யவும், இருப்பு வைக்கவும் பூச்சிக்கொல்லி விற்பனை உரிமம் அவசியம் எனவும், உரிமம் இல்லாமல் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பெட்டிக்கடைகள், மளிகைக் கடைகள், பேரங்காடிகள் போன்றவற்றில் எலி விஷம், கரப்பான் கொல்லிகள், கொசுவிரட்டிகள் போன்ற வீட்டில் பயன்படுத்தும் பூச்சி கொல்லிகள் ஆகியவற்றை விற்பனை உரிமம் பெறாமல் விற்பனை செய்யப்படுவது பூச்சிக் கொல்லிச் சட்டம் 1968 -இன்படி குற்றமாகும். வீடுகளில் பயன்படுத்தும் பூச்சிக் கொல்லிகளைக் கடைகளில் விற்கவும் உரிமம் பெறுவது அவசியமாகும்.

இதற்குத் தேவையான உரிமத்தினைப் பெறத் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். நகர்ப்புறத்தில் ஒரு பூச்சிக்கொல் லிக்கு ரூ.500 – என்ற வீதத்தில் அதிகபட்சம் ரூ.7500- செலுத்தி யும், ஊரகப் பகுதியில் ஒரு பூச்சிக்கொல்லிக்கு ரூ.100- என்ற வீதத்தில் அதிகபட்சம் ரூ.1500- செலுத்தியும் உரிமம் பெற்றுக் கொள்ளலாம்.உரிமம் பெறாமல் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது பூச்சிக்கொல்லிச் சட்டம் 1968-இன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

எனவே, அனைத்துப் பெட்டிக்கடை, மளிகைக்கடை மற்றும் பேரங்காடிகளின் விற்பனையாளர்கள் உடன் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தினை அணுகி உரிமம் பெற்று விற்பனை செய்ய வேண்டும் எனவும், பூச்சிக்கொல்லிச் சட்டம் 1968-இன்படி உரிய பதிவேடு களையும் ஆவணங்களையும் பராமரிப்பதோடு விற்பனை செய்வதற்கு உரிய பட்டியலையும் வழங்க வேண்டும் .

பற்பசை வடிவில் விற்பனை செய்யப்படும் ரேட்டால் எனப்படும் 3 சத மஞ்சள் பாஸ்பரஸ் கொண்ட எலிக்கொல்லி விஷம் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனை விற்பனையாளர்கள் விற்பனை செய்யக்கூடாது, ஆய்வின் போது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

மேலும், விற்பனை நிலையங்களில் வீட்டில் பயன்படுத்தும் பூச்சிக் கொல்லிகளை உணவுப் பொருட்கள் அருகில் வைத்து விற்பனை செய்யாமல் தனியாக இருப்பு வைத்து விற்பனை செய்ய வேண்டும் எனவும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மேற்கண்ட வீட்டுப் பயன்பாட்டுப் பூச்சிக்கொல்லிகளை விற்பனை செய்யக் கூடாது.

இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு தங்கள் பகுதிக்கு அருகாமையில் உள்ள வட்டார வேளாண் உதவி இயக்குநரை  தொடர்பு கொண்டு உரிமம் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top