Close
செப்டம்பர் 20, 2024 8:41 காலை

செக்கானூரணி அருகே கனிமவளக் கொள்கையை தடுக்க சமூக ஆர்வலர் கோரிக்கை

மதுரை

மதுரை மாவட்டம் செக்கானுரணி அருகே விதி மீறி மண் அள்ளப்படுவதாக புகார்

மதுரை மாவட்டம், செக்கானூரணி அருகே நாகமலையில் நடந்து வரும் கனிமவள கொள்ளையை ஆட்சியர் நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை மாவட்டம், செக்கானூரணி அருகே புளியங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட ஊத்துப்பட்டி கிராமத்தில் நாகமலை அடிவாரத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக கனிமவள கொள்ளை நடைபெற்று வருவதைத் தடுக்க வேண்டுமென அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகமலை அடிவாரத்தில் 60 செண்டு நிலத்தில் மணல் அல்ல அனுமதி பெற்று 12.ஏக்கர் நிலப்பரப்பில் மண் அள்ளப்பட்டு உள்ளது.மேலும், அரசு அனுமதித்துள்ள அளவைவிட அளவுக்கு அதிகமான மணல் அள்ளப்படுவதாகவும் இரவு நேரங்களில், ஜேசிபி வாகனம் மூலம் லாரிகளில் ஏற்றி மூன்று வழி பாதைகள் அமைத்து பல்வேறு இடங்களுக்கு கனிம வளம் கடத்திச் செல்லப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து, சமூக ஆர்வலர்கள் திருமங்கலம் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் , மதுரை மாவட்ட ஆட்சியர், முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் செக்கானூரணி காவல் நிலையம் ஆகிய இடங்களில் பல்வேறு முறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லையாம்.

மாறாக, மணல் கடத்தலில்ல் ஈடுபடும் நபர்கள் மற்றும் புகார் அளிப்பவரின் செல்போன் எண்ணைப் பெற்று நள்ளிரவு வேளையில் அவரது குடும்பத்தினரை மிரட்டும் சூழ்நிலை உள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.

இதன் காரணமாக, இப்பகுதியில் உள்ள கிராம பொதுமக்கள் புகார் அளிக்க அச்சப்படுகின்றனர். மேலும், அடிக்கடி கொலை மிரட்டல் வருவதால் உயிர் பயத்தில் இருப்பதாகவும் கூறுகின்றனர்.

மேலும், 12 ஏக்கர் நிலப்பரப்பில் மணல் அள்ளி பள்ளம் ஏற்படுத்தியதால் மேய்ச்சலுக்காக செல்லும் ஆடு, மாடுகள் அதில் விழுந்து பலியாகும் அபாயமும் உள்ளது. இது சம்பந்தமாக, வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, புகைப்படமும் அனுப்பியும்,இதுவரை வனத்துறையும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

குறிப்பாக, மிகவும் பாரம்பரியமான நாகமலையை முற்றிலுமாக உடைத்து சிதிலமடைய செய்யும் முன், மாவட்ட நிர்வாகம் விழித்துக் கொண்டு மாவட்ட ஆட்சியர் நேரடி விசாரணையில் இறங்கி கனிமவள கொள்ளையில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இப்பகுதியில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று, சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்துகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top