Close
செப்டம்பர் 20, 2024 5:31 காலை

பொற்பனைக்கோட்டை அகழ்வு ஆய்வில் வெளிப்பட்ட செங்கல் கட்டுமானம்…!

இந்தியா

பொற்பனைக்கோட்டையில் தொடங்கிய அகழ் ஆய்வில் தெரியவந்த செங்கல் கட்டுமானம்

பொற்பனைக்கோட்டை அகழ்வாய்வு பணியில் முதல் கட்டமாக செங்கல் கட்டுமானம் வெளிப்பட்டுள்ளதைத் தொடர்ந்து  பல்வேறு பழங்கால வரலாற்று தரவுகள் தெரிய வரும் என தொல்லியல் ஆய்வுக்கழகம் தெரிவித்துள்ளது.

புதுக்கோட்டை பொற்பனைக்கோட்டை சங்ககால கோட்டை என்பதற்கான ஆதாரங்களைபுதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழகம் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்தது.

இந்த ஆதாரங்களின் அடிப்படையில் தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் தலைவர் கரு. இராஜேந்திரன் பொற்பனைக் கோட்டையில் அகழ்வு ஆய்வு நடத்த வேண்டுமென வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த வழக்கினை வழக்கறிஞர் கணபதி சுப்ரமணியம் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் நடத்தி நீதியரசர் கிருபாகரன் அடங்கிய இரு நபர் நீதிபதிகள் அமர்வில் விசாரணை முடிவில் பொற்பனைக்கோட்டையில் அகழ்வு ஆய்வு செய்ய  வேண்டுமென உத்தரவிட்டனர்.

கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக பேராசிரியர் இ. இனியன் முதல் கட்ட அகழ்வாய்வை நடத்தினார்.

இதனைத்தொடர்ந்து விரிவான அளவில் ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையில் சில நாட்களுக்கு முன்பு தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பொற்பனைக்கோட்டை அகழ்வு ஆய்வை தொடங்கி வைத்தார். அகழ்வு ஆய்வு இயக்குநராக தொல்லியல் அலுவலர் தங்கதுரை நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், செங்கல் கட்டுமானம் வெளிப்பட்டுள்ளது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தனது அலுவலக முகநூல் பக்கத்தில் தகவல் பகிர்ந்துள்ளார்.

புதுக்கோட்டை
பொற்பனைக்கோட்டையில் நடைபெறும் அகழ் ஆய்வு

அதில்,புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக் கோட்டையில் தமிழ் நாடு அரசின் தொல்லியல் துறை வாயிலாக அண்மை யில் தொடங்கப்பட்ட அகழ்வாராய்ச்சியில் 07 முதல் 19 செ.மீ ஆழத்தில் செங்கல் கட்டுமானம் வெளிக்கொணரபட்டுள் ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொற்பனைக்கோட்டையின் அரண்மனை மேட்டுப்பகுதியில் ஏற்கெனவே ஆம்போரா அடிப்பாகம், கூரை ஓடுகள்,பல்வேறு வகையிலான மணிகள்அடையாளப்படுத்தப் பட்டிருந்த நிலையில், தற்போது செங்கல் கட்டுமானம் வெளிப்பட்டு இருப்பதாக தொல்லியல் துறை அமைச்சர் தகவல் தெரிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கக்கூடிய செய்தியாகும்.

மேலும் ஆய்வு தொடரும்போது தமிழகத்திற்கும், இந்திய வரலாற்றுக்கும் , புதிய வெளிச்சத்தை இந்த அகழ்வாய்வு தரும் என்று நம்புகிறோம் என்று புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் ஆ. மணிகண்டன், தலைவர் கரு. ராஜேந்திரன் ஆகியேர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top