Close
ஏப்ரல் 23, 2026 8:17 மணி

தேர்தல் பணிக்கு தேர்வு செய்யப்படும் அலுவலர்களை சொந்த தொகுதியில் நியமிக்க வேண்டும்: முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர், நாமக்கல் ராமு.

தேர்தல் பணிக்கு தேர்வு செய்யப்படும் அலுவலர்களை சொந்த தொகுதியில் நியமிக்க வேண்டும் என முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத் தலைவர் நாமக்கல் ராமு, தமிழக தலைமை தேர்தல் அலுவலருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் வருகிற ஏப். 23 அன்று ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குச்சாவடிகளில் பணிபுரிய நியமிக்கப்படும் அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், தாங்கள் வசிக்கும் பகுதியில் இருந்து வெகு தொலைவில் பணியமர்த்தப்படுகின்றனர்.

அவர்கள் இரவு பகலாக பயணம் செய்யும் போது விபத்துக்கள் ஏற்பட்டு சில நேரங்களில் மரணங்கள் கூட நடைபெறுகிறது. ஆசிரியர்களில் பெரும்பாலானவர்கள் பெண் ஆசிரியர்களாக உள்ள நிலையில் தொலைதூரத்தில் பணிகள் நியமிக்கப்படும்போது தங்கும் வசதி, சுகாதார வசதி உள்ளிட்ட பிரச்சினைகளால் அவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே தேர்தல் வாக்குப்பதிவு பணியில் நியமிக்கப்படும் பெண் ஊழியர்கள் மற்றும் ஆண் ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை ஊழியர்களையும் அவர்களது சொந்த சட்டசபை தொகுதியில் பணியமர்த்த வேண்டும்.

விதிமுறைகளின்படி அவர்கள் பணிபுரியும் ஒன்றியத்தை விட்டு வேறு ஒன்றியத்தில் பணியமர்த்தலாம். இது குறித்த உத்தரவை, மாநில தேர்தல் ஆணையம் மூலம் அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், தற்போதைய விலைவாசி அடிப்படையில், தேர்தல் பயிற்சி மற்றும் பணியில் ஈடுபடும் அனைத்து நிலை பணியாளர்களுக்கும், தேர்தல் பணி உழைப்பூதியத்தை, கடந்த தேர்தலில் வழங்கப்பட்டதை விட இரு மடங்காக உயர்த்தி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top