Close
மே 20, 2024 12:42 மணி

லோக்சபா தேர்தலில் பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றிபெற்று மீண்டும் மோடி பிரதமராவார் : எல் முருகன்

நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றிபெற்ற, மோடி மூன்றாவது முறையாக பிரதமாராவார் என மத்திய இணை அமைச்சர் முருகன் கூறினார்.
மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சர் எல். முருகன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நாமக்கல் வந்தார். நாமக்கல் உழவர் சந்தை அருகில், நகர பாஜக தலைவர் சரவணன் தலைமையில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தி.மு.க., என்றாலே கட்டப்பஞ்சாயத்து கட்சி, ஊழல் கட்சி, குடும்ப கட்சி என்ற நிலையில் இருந்து, தற்போது, போதைப் பொருள் கடத்தல் கட்சியாக மாறிவிட்டது. தி.மு.க.வின் முக்கிய நிர்வாகி ஒருவர், ரூ. 3,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தியது தெரியவந்துள்ளது. கடந்த, 60 ஆண்டுகளாக தி.மு.க., தமிழகத்தை சீரழித்து விட்டது. கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் வளர்ச்சி திட்டங்கள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் எதையும் செய்து கொடுக்கவில்லை. தி.மு.க. தோல்வி அடைந்த கட்சியாக உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, 3வது முறையாக, மக்கள் ஆதரவுடன், 400க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றி, ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. பா.ஜ., வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். நாமக்கல் மாவட்டத்தில், பா.ஜ.க நல்ல வளர்ச்சியடைந்துள்ளது. கட்சி நிர்வாகிகள் தீவிரமாக தேர்தல் பணியாற்றி, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து லோக்சபாவிற்கு அனுப்ப வேண்டும். தமிழகத்தில், என் மண், என் மக்கள் யாத்திரை மிகப்பெரிய அளவில் வெற்றிப்பெற்றுள்ளது.
மத்திய அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்கியதால்தான், போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இண்டியா கூட்டணியில் உள்ள நபர்கள், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு கைதாகி உள்ளனர். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து கடத்தப்படும் போதை பொருட்களை, குஜராத் மாநில போலீசார் விழிப்புடன் இருந்து பறிமுதல் செய்கின்றனர். போதை பொருள் கடத்தலுக்கு தி.மு.க., வி.சி., கட்சியினர் உடந்தையாக உள்ளனர். புதிதாக இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயில், நாமக்கல் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். பாஜக சார்பில், ஒரு கோடி மக்களிடம் வளர்ச்சி அடைந்த பாரதம், நமது லட்சியம் குறித்து தேர்தல் விஷன் டாக்குமெண்டரி படம் பா.ஜ. சார்பில் தயாரிக்கப்பட உள்ளது. அதற்காக, ஒரு கோடி மக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்சியில் பாஜக மாநில துணைத் தலைவர் டாக்டர் ராமலிங்கம், மாவட்ட தலைவர்கள் சத்தியமூர்த்தி, ராஜேஸ்குமார் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top