Close
அக்டோபர் 5, 2024 10:32 மணி

கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கிய போக்குவரத்து தொழிலாளர்கள்

தஞ்சாவூர்

தஞ்சாவூரில் போக்குவரத்துக்கழக அதிகாரியிடம் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கிய தொழிலாளர்கள்

போக்குவரத்து தொழிலாளர்களின் 15 ஆவது ஊதிய ஒப்பந்தம், ஓய்வு பெற்றவர்கள் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளில் தமிழ்நாடு அரசு தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு சார்பில் தஞ்சாவூர் கோட்ட மேலாளர் மற்றும் கிளை மேலாளர்களிடம் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டது!.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் தொழிலாளர்களின் 15 -ஆவது ஊதிய ஒப்பந்தம் உடனடியாக பேசி முடிக்க வேண்டும், பணிபுரிந்து ஓய்வு பெற்ற சுமார் 91 ஆயிரம் ஓய்வூதியர் களுக்கு 2015 முதல் உயர்ந்துவிட்ட பழைய- புதிய அகவிலைப் படி உயர்வு நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும்.

போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள ஓட்டுனர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களையும் நேரடி நியமனம் மூலம் உடனடியாக நிரப்பிட வேண்டும், கடந்த 2016 ஆம் ஆண்டு வாரிசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை உடனடியாக வழங்க வேண்டும்.

வாரிசு பணி ஆண்டுதோறும் வழங்க வேண்டும், திமுக தேர்தல் கால வாக்குறுதி அடிப்படையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஓய்வூதியத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும். போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனை ஈடு செய்ய உடனுக்குடன் தேவையான நிதியினை ஒதுக்க வேண்டும். கடந்த 2022 நவம்பர் மாதம் முதல் 2023 நவம்பர் வரை ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பலன் எதுவும் வழங்கப்படவில்லை. உடனடியாக ஓய்வு. கால பணப்பலன்களை வழங்கிட வேண்டும்.

இனிவரும் காலங்களில் ஓய்வு வரும் நாளன்றே அனைத்து பணப் பலன்களையும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வுதியர் கூட்டமைப்பு சங்கங்கள் சார்பில் டிசம்பர் 4, 5 தேதிகளில் பிரச்சார இயக்கம் தமிழ்நாடு முழுவதும் அனைத்து பணிமனைகள், பேருந்து நிலையங்களில் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசும் போக்குவரத்துக் கழக நிர்வாகங்களும் கோரிக்கையில் அழைத்து பேசி தீர்வு காணப்படாவிட்டால் 19.12.2023 அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து கிளைமேலா ளர்கள், பொது மேலாளர்,மேலாண் இயக்குனர்களுக்கு வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கப்படும் என்ற முடிவின்படி, செவ்வாய்க்கிழமை  காலை 10 மணிக்கு தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் அரசு போக்குவரத்து கழக கோட்டை மேலாளர், தஞ்சாவூர் நகர் 1, நகர் 2 கிளைமேலாளர்கள், ஆகியோரிடம் சிஐடியூ மத்திய சங்க பொருளாளர் எஸ்.ராமசாமி, ஏ ஐ டி யூ சி மத்திய சங்க பொதுச் செயலாளர் எஸ்.தாமரைச்செல்வன், ஐஎன்டியூசி நிர்வாகி தி.மணிகண்டன் ஆகியோர் தலைமையில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தி வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதேபோல், தஞ்சாவூர் அரசு விரைவு போக்குவரத்து கழகம், திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, கும்பகோணம் நகர்1, கும்பகோணம் நகர் 2, கும்பகோணம் புறநகர், பொது மேலாளர், மற்றும் மேலாண் இயக்குனர் ஆகியோரிடம் இன்று வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டது.

தஞ்சாவூர் புறநகர் கிளை மேலாளரிடம் சிஐடியூ மத்திய சங்கத் தலைவர் காரல் மார்க்ஸ் தலைமையிலும், அரசு விரைவு போக்குவரத்து கழக கிளைமேலாளரிடம் சிஐடியூ மாநில துணை செயலாளர் ஜெ.வெங்கடேசன், ரிவா சங்க தலைவர் ஞானசேகரன் தலைமையிலும் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டது .

இந்த நிகழ்வில் சிஐடியூ நிர்வாகிகள் செந்தில்குமார் முருகானந்தம், அர்ச்சுனன், ஏ ஐ டி யூ சி சம்மேளனத்தின் துணைத் தலைவர். துரை.மதிவாணன், நிர்வாகிகள் சி.ராஜமன்னன், ஆர் .ரெங்கதுரை, ஐ என் டி யு சி நிர்வாகிகள் என்.மோகன்ராஜ், கென்னடி, குலோத்துங்கன்.

கும்பகோணம் ஓய்வு பெற்றோர் நல சங்க நிர்வாகிகள் ஏ.கணேசன், முருகானந்தம்,ரிவா சங்க தலைவர்கள் பாஸ்கர், ஜீவா, சௌந்தர்ராஜன், ஏஐடியூசி ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலாளர் பி.அப்பாத்துரை.

துணைத் தலைவர்கள் கே.சுந்தரபாண்டியன், பி.சக்திவேல், அதிகாரிகள் நல சங்க நிர்வாகிகள் ஜெ.சந்திரமோகன், சிதம்பரநாதன், பொறியாளர்கள் சங்க நிர்வாகிகள் எஸ்.இரவீந்திரன், அசோகன், கண்காணிப்பாளர் சங்க நிர்வாகிகள் எஸ்.பாலசுப்பிமணியன், சம்பத் , தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி அருள்தாஸ், பாதுகாவலர் பிரிவு நிர்வாகி சாமிநாதன், திருச்சி ஓய்வு பெற்றோர் சங்க தலைவர் என்.மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top