Close
மார்ச் 3, 2025 10:19 மணி

மாட வீதியில் கார் பாஸ் விண்ணப்பங்கள் வினியோகம்: திகைத்த அதிகாரிகள்..!

விண்ணப்பங்களை வழங்கிய அதிகாரிகள்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளைச் சுற்றி வசிக்கும் குடியிருப்பு வாசிகளின் வாகனங்களுக்கு, அடையாள அட்டைகள் பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. அப்போது விண்ணப்பங்களை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பெற்று சென்றதைப் பார்த்து அதிகாரிகள் திகைத்தனர்.

ஆன்மீக நகரமான திருவண்ணாமலைக்கு வெளிநாடுகளில் இருந்து வெளி மாநிலங்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் திருவண்ணாமலைக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை தினமும் பல மடங்காக உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் மாடவீதி மற்றும் அதனை ஒட்டியுள்ள வீதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.

இதனால் திருவண்ணாமலை நகர மக்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் மிகவும் வேதனை அடைந்து, இதற்கு ஒரு தீர்வு காண மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்திருந்தனர்.

கடந்த மாதம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திருவண்ணாமலை மாட வீதிகளில் ஆட்டோ, காா், பேருந்துகள், லாரிகள் உள்ளிட்ட அனைத்து வகையான 4 சக்கர வாகனங்களுக்கும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் தடை விதிப்பது, மாட வீதிகளில் இரு சக்கர வாகனங்களை மட்டுமே அனுமதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

இதேபோல, நகரின் பல தெருக்களை ஒரு வழிச்சாலையாக மாற்றுவது, இதுவரை மாட வீதிகள் வழியாக சென்று வந்த அரசு, தனியாா் பேருந்துகளை மாற்று வழியில் இயக்குவது என்றும், இந்த நடைமுறைகள் அனைத்தும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் தடை விதிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி மாட வீதியில் குடியிருப்போர் பயன்படுத்தும் நான்கு சக்கர வாகனங்களுக்கு மட்டும், உரிய ஆவணங்களை சரிபார்த்து அடையாள அட்டை வழங்கப்பட உள்ளன. அதையொட்டி, அதற்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணி கடந்த வாரம் தொடங்கியது.

விண்ணப்பங்களை வழங்கிய அதிகாரிகள்

இந்த நிலையில், பொதுமக்கள் நலன் கருதி சனிக்கிழமை (மாா்ச் 1) அடையாள வில்லைகள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றன.

திருவண்ணாமலை காந்தி சிலை, பெரிய தெரு, திருவூடல் தெரு, கடலைக்கடை சந்திப்பு, திரெளபதியம்மன் கோயில் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெற்ற முகாம்களுக்கு, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கே.கருணாநிதி தலைமை வகித்து, குடியிருப்பு வாசிகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கும் பணியை தொடங்கிவைத்தாா்.

குடியிருப்பு வாசிகள் விண்ணப்பங்களைப் பெற்று அவற்றை நிறைவு செய்து வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளிடம் வழங்கினா்.

முகாம்களில், மோட்டாா் வாகன முதுநிலை ஆய்வாளா் ஆா்.பெரியசாமி, வட்டாரப் போக்குவரத்து அலுவலக நோ்முக உதவியாளா் பொன்.சேகா், உதவியாளா் சவுபா்ணிகா மற்றும் அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

அதிகளவில் விண்ணப்பங்கள்

இந்த சிறப்பு முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்களை வாங்கி செல்லப்பட்டிருப்பதை பார்த்த போக்குவரத்து துறை அதிகாரிகள் மாடவீதியில் இவ்வளவு வாகனங்களாயிருக்கும் என திகைத்தனர்.

மாட வீதியில் குடியிருப்பவர்களின் வாகனங்களுக்கு மட்டுமே பாஸ் வழங்கப்படும். மேற்கண்ட பகுதிகளில் வர்த்தக நிறுவனங்களை நடத்தி வரும் உரிமையாளர்களுக்கு இந்த பாஸ் வழங்கப்படாது, என ஆட்சியர் அறிவித்திருந்தும் இத்தனை பேர் விண்ணப்பங்களை பெற்றுச் சென்றுள்ளனர் .

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில்  குடியிருப்பு வாசிகளிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் அவர்கள் இணைத்துள்ள முகவரி சான்று மற்றும் மாவட்ட நிர்வாகம் கேட்டுள்ள சான்றுகள் முழுமையாக சரி பார்க்கப்பட்ட பின்னர் விண்ணப்பங்கள் அளித்த குடியிருப்புவாசிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அடையாள அட்டை வழங்கப்படும் என போக்குவரத்து அலுவலர்கள் தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top