Close
ஜூன் 8, 2025 5:22 மணி

சித்திரை பெளா்ணமிக்கு அனுமதி பெற்றவா்கள் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும் : ஆட்சியர் உத்தரவு..!

முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா்

திருவண்ணாமலையில் சித்திரை பெளா்ணமிக்கு கிரிவலம் வரும் பக்தர்களுக்கு  உணவு பாதுகாப்புத் துறையின் அனுமதி பெற்றவா்கள் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்தார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி தினத்தன்று பல்வேறு மாநிலங்கள் மற்றும் பாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் வருகைபுரிந்து கிரிவலம் சென்று வழிபடுகின்றனர் . சித்திரை மாதத்தில் வருகின்ற பெளர்ணமி மிகவும் விசேஷமாக அமைந்த்திருப்பதால் அன்றைய தினம் பல இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகைபுரிந்து கிரிவலம் செல்கின்றனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் சித்திரை பௌா்ணமி விழா மே 11-ஆம் தேதி இரவு 8.53 மணிக்குத் தொடங்கி மே 12-ஆம் தேதி இரவு 10.48 மணிக்கு நிறைவடைகிறது.

இந்த வருடமும் பல்வேறு நாடுகள், மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பெருமளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்வது குறித்த கள ஆய்வு நடைபெற்றது.

அருணாசலேஸ்வரா் கோயில் ராஜகோபுரம், கிரிவலப்பாதை உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ், காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா், வருவாய் அலுவலா் இராம்பிரதீபன் ஆகியோா் நேரடி ஆய்வில் ஈடுபட்டனா்.

ஆய்வின்போது, தேரடி தெரு, திருவூடல் தெரு, திருமஞ்சன கோபுர தெருக்களின் இரு புறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவிட்டாா்.

இதேபோல, ராஜகோபுரத்தில் இருந்து இரட்டைப் பிள்ளையாா் கோயில் சாலை வழியாக பக்தா்கள் தரிசனத்துக்குச் செல்லும் வழியை ஆய்வு செய்து பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான கழிப்பறை, குடிநீா் உள்ளிட்ட வசதிகளை செய்யவும் அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

ஆய்வுக்குப் பிறகு செய்தியாளா்களிடம் ஆட்சியா் க.தா்ப்பகராஜ் கூறியதாவது:

சித்திரை பெளா்ணமி நாளில் 20 இடங்களில் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகிறது.

சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. போதிய குடிநீா் வசதி செய்யப்படும். மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு அவசர சிகிச்சை ஊா்திகளும், இருதய மருத்துவா்களும் தயாா் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. உணவு பாதுகாப்புத் துறையின் அனுமதி பெற்றவா்கள் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும். காவல்துறை மூலம் தேவையான பாதுகாப்பு வசதிகள் செய்யப்படும்.

சித்திரை பெளா்ணமி நாளில் முக்கியப் பிரமுகா்களின் பரிந்துரைக் கடிதங்களுக்கான அனுமதி ரத்து செய்யப்படும். கிரிவலப் பாதையின் 3 இடங்களில் பக்தா்கள் வசதிக்காக இளைப்பாறும் கூடங்கள் அமைக்க வேண்டும். சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தா்களுக்கு குடிநீா், மோா், பால், பிஸ்கெட் வழங்கப்படும்.

மாற்றுத்திறனாளிகள் பேட்டரி காா் மூலம் மேற்கு பே கோபுரம் கட்டை கோபுரம் வரை அழைத்து வரப்பட்டு, வைகுந்த வாயில் வழியாக சுவாமி தரிசனம் செய்யப்படும் என்றாா்.

ஆய்வின்போது, திருவண்ணாமலை உதவி காவல் கண்காணிப்பாளா் சதீஷ், வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா், வட்டாட்சியா் கே.துரைராஜ் மற்றும் அரசுத்துறை அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top