Close
மார்ச் 7, 2026 8:01 மணி

அக்னி நட்சத்திரம் தொடக்கம், கோயில்களில் தாராபிஷேகம்..!

அண்ணாமலையார்

அக்னி நட்சத்திரம் துவங்கியதையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், தாராபிஷேகம் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் கோடையின் தாக்கம் வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட வட மாவட்டங்களில் வழக்கத்தைவிட அதிகரிப்பது வழக்கம். இந்த ஆண்டு கோடை வெயில் மார்ச் முதல் வாரத்திலேயே தொடங்கியது. 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்தது.

மேலும், எதிர்பாராத கோடை மழை பெய்தாலும், இயற்கையின் சமநிலையற்ற தன்மை காரணமாக இந்த ஆண்டு வழக்கம் போல வெயிலின் பாதிப்பு கடுமையாக இருக்கும் என வானிலை ஆய்வு அறிக்கை தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு, கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கியது.

4ம் தேதி முதல் வரும் 29ம் தேதி வரை அக்னி நட்சத்திர காலமாகும். அதில், முதல் 15 நாட்களுக்கு வெயில் அதிகமாகவும், பின்னர் படிப்படியாக குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறைவனை குளிர்விக்க

சித்திரை மாதம் பின் பகுதியில், அக்னி நட்சத்திரம் துவங்கும். இக்காலத்தை, ஆகம நூல்களில், தோஷகாலம் என்பர். இக்காலத்தில் கோவில்களில் கர்ப்ப கிரகத்தில் உள்ள இறைவனை குளிர்விக்க, கர்ப்ப கிரகங்களில் தண்ணீர் கட்டுதல், தாராபிஷேகம் போன்றவை நடக்கும்.

அபிஷேகத்திற்கான பொருட்கள்:

அண்ணாமலையார் கோவிலில், அக்னி நட்சத்திரம் காலத்தில், சிறு துளையுள்ள வெள்ளி பாத்திரத்தில், பன்னீர் நிரப்பி, அதில் பச்சை கற்பூரம், வெட்டிவேர், விளாமிச்சை வேர் மற்றும் வாசனை திரவியங்கள் இடப்பட்ட பாத்திரம் இறைவன் சிரசில் சொட்டு, சொட்டாக விழும்படி பொறுத்தப்பட்டது. உச்சிகால அபிஷேகம் காலை, 11.30 மணிக்கு முடிந்த பின், தாரா அபிஷேகம் துவங்கி, மாலை 6 மணி வரை நடக்கும். இக்காலத்தில் சிவபெருமான் சிரசில், நாக ஆபரணம் அணிவிக்கப்படாது. வரும் 28ம் தேதி அக்னி நட்சத்திரம் முடியும் வரை, தினசரி தாரா அபிஷேகம் நடைபெறும்.

ஆதி அண்ணாமலையார் கோயில், கிரிவலப் பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலையார் கோயில் மற்றும் அஷ்டலிங்க கோயில்கள், ஸ்ரீ சேஷாத்திரி ஆசிரமம் உட்பட மாவட்டத்தில் உள்ள சிவாலயங்களில் தாராபிஷேகம் காலை முதல் தொடங்கி நடைபெற்றது.  காலை முதல் இரவு வரை நீண்ட வரிசையில் நின்று தாராபிஷேகத்தை பாா்த்து, சுவாமி தரிசனம் செய்தனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top