நாமக்கல் :
விஜயமங்கலத்தில் 11ம் தேதி துவங்க உள்ள விவசாய கண்காட்சிக்கு, வேளாண்துறை சார்பில் நாமக்கல் மாவட்ட விவசாயிகள் அழைத்துச்செல்லப்பட உள்ளனர்.
இது குறித்து, நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
வரும் 11 மற்றும் 12ம் தேதி ஆகிய 2 நாட்கள், மாநில அளவிலான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம், ஈரோடு மாவட்டம், விஜயமங்கலத்தில் நடைபெறுகிறது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இந்த கண்காட்சியை தொடங்கி வைக்க உள்ளார்.
கண்காட்சியில் வேளாண்மைத்துறை மற்றும் அதனுடன் இணைந்த துறைகளை சார்ந்த, அனைத்து புதிய தொழில்நுட்பங்களையும் விவசாயிகள் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலிருந்தும் விவசாயிகளை கண்காட்சிக்கு அழைத்துச்செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, அனைத்து வட்டாரங்களிலும் உள்ள விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொண்டு, மாநில அளவிலான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.