காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், மானாம்பதி ஊராட்சியில் இயங்கி வருகிறது அரசு மேல்நிலைப்பள்ளி.
இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் ஆறாம் வகுப்பு முதல் +2 வரை பயின்று வருகின்றனர்.
வழக்கம் போல் பள்ளி செயல்பட்டு வந்த நிலையில் பிளஸ் டூ வணிகவியல் பயிலும் மாணவன், அருகிலிருந்த கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவு வகுப்பறையில் பயிலும் மாணவிகளிடம் பேசிக் கொண்டிருந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த ஆசிரியர்கள் வணிகவியல் வகுப்பறை வேறு பகுதிக்கு மாற்றி உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த வணிகவியல் மாணவன், கம்ப்யூட்டர் சயின்ஸ் வகுப்பறைக்கு சென்று அங்கிருந்த மாணவன் ஒருவனிடம் சண்டை போட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வணிகவியல் மாணவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் பயிலும் மாணவன் வீட்டிற்கு வந்து அவனை அருகில் உள்ள பூங்காவுக்கு அழைத்து சென்று கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பயிலும் மாணவன் வலி தாங்க முடியாமல் அருகில் இருந்த இரும்பு பொருள் எடுத்து வணிகவியல் மாணவனின் கழுத்தில் குத்தியதால் இரத்தப்போக்கு ஏற்பட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் மானாம்பதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் உதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவு சேர்க்கப்பட்டுள்ளார்.
மாணவிகளிடம் பேசுவதில் ஏற்பட்ட மோதல் தற்போது விபரீதத்தை விளைவித்துள்ளது.
இதில் பாதிக்கப்பட்ட மாணவன், தாக்கிய மாணவன் ஆகியோர் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் ஒருவித பதற்றம் ஏற்பட்டு வருகிறது.
இதுகுறித்து பெருநகர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




