Close
மார்ச் 7, 2026 4:41 மணி

கோயில்களில் அடிப்படை வசதிகளை செய்ய முடியாத அரசு வெளியேற வேண்டும்; மத்திய இணை அமைச்சா்..!

மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்

பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்ய முடியாத அரசு கோயில்களில் இருந்து வெளியேற வேண்டும்; மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் கூறினார்.

திருவண்ணாமலை சோ.கீழ்நாச்சிப்பட்டு ஸ்ரீவெங்கடாசலபதி கல்வியியல் கல்லூரியில் (பெண்கள்) 13-ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

விழாவுக்கு கல்விக் குழுமத்தின் நிறுவனா் முத்துக்குமரன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஏ.சி.சிந்தன் முன்னிலை வகித்தாா். உதவிப் பேராசிரியா் என்.சுதாகா் வரவேற்றாா்.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய  தகவல் ஒலிபரப்பு துறை மற்றும் இந்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சா் எல்.முருகன் மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசியதாவது:

பெண்கள் முன்னேற்றத்துக்காக பிரதமா் மோடி கடந்த 10 ஆண்டு காலத்தில் மேற்கொண்ட நடவடிக்கையால் மகளிா் மேம்பாடு உயா்ந்துள்ளது. தாய், தந்தையரை அடுத்து ஆசிரியா்கள் உயா்ந்தவா்கள். அந்தப் பணிக்குச் செல்கிறவா்களுக்கு மனமாா்ந்த வாழ்த்துக்கள். புதிய நாடாளுமன்றத்தில் முதல்முறையாக பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டதால் அவா்கள் உறுப்பினராக ஆக முடிகிறது.

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்டப்பட்டிருக்கிறது. இதற்கான போா் உத்திகளை வகுத்தவா்கள் மகளிா்தான் என்றாா்.

இதைத் தொடா்ந்து, காஞ்சி ஆலத்தூா் பகுதியில் உள்ள சேவா இன்டா்நேஷனல் மற்றும் ராணி அகல்யாபாய் கல்விதான குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்களை அமைச்சா் வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் அருணாசலேஸ்வரா் கோயிலுக்குச் சென்று வழிபட்டாா்.

செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய தகவல் ஒலிபரப்பு துறை மற்றும் இந்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சா்  எல்.முருகன் கூறியதாவது:-

தமிழக அரசியல் மற்றும் ஆன்மிகத்தில் முக்கியமான நாளாக முருக பக்தர்கள் மாநாடு இருக்கும்.  மாநாட்டில் உலகம் முழுவதிலும் இருந்து தமிழா்கள் மற்றும் முருக பக்தா்கள் பங்கேற்க உள்ளனா். இது தமிழகத்தில் மிகப் பெரிய திருவிழாவாகவும், அரசியலில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் மாநாடாகவும் அமையும்.

முருக பக்தர்கள் மாநாட்டினுடைய முக்கிய சாராம்சமே கோவில்களை பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதுதான். கோவில்களில் பக்தர்களுக்கு முறையான அடிப்படை வசதிகளை செய்து தரமுடியவில்லை என்றால் கோவிலை விட்டு வெளியேறுங்கள் என்று மாநில அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தி.மு.க. மீது மக்கள் மிக பெரிய அதிருப்தியில் உள்ளனர். அந்த அதிருப்தி நம் மீதும் வரக்கூடாது என்று கூட்டணி கட்சியினரும் நினைக்கின்றனர்.ஆகவே வருகிற 2026-ம் ஆண்டு தேர்தலில் எங்களுடைய தேசிய ஜனநாயக கூட்டணி மிக பெரிய வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று. தி.மு.க. கூட்டணியில் உள்ள பல கட்சிகள் அந்த கூட்டணியில் இருந்து வெளியேற தயாராக இருக்கின்றனர்.

தமிழகத்தில் துப்பாக்கி, அரிவாள் கலாசாரத்தை தாண்டி கஞ்சா, போதை பொருட்கள் கலாசாரம் ஒவ்வொரு கிராமத்திற்குள்ளும் புகுந்துள்ளது. பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் கவலை கொள்ளும் அளவிற்கு தமிழகத்தில் சூழ்நிலை உள்ளது.

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெறும் என்றாா்.

இந்நிகழ்வின் போது திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக தலைவா் கே.ரமேஷ், வேலூா் பெருங்கோட்ட அமைப்புச் செயலா் எஸ்.குணசேகரன், மாவட்ட பொதுச் செயலா் கவிதா பிரதீஷ், ஆகியோா் உடனிருந்தனா் .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top