Close
மார்ச் 7, 2026 4:22 மணி

திருவண்ணாமலை மாவட்ட வளர்ச்சி பணிகள்: திட்ட இயக்குனர் ஆய்வு

வளர்ச்சி பணிகளை ஆய்வு மேற்கொண்டு முதன்மை பொறியாளர்

திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம், கலசப்பாக்கம், தேவிகாபுரம் உள்ளிட்ட ஊராட்சியில்  நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை ஊரக வளா்ச்சித் துறை முதன்மைப் பொறியாளா் சேதுராமன் ஆய்வு மேற்கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரம் ஊராட்சியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் 2024-2025ஆம் நிதியாண்டில் 15-ஆவது நிதிக்குழு மானிய திட்டத்தில் ரூ.2 கோடியே 10 லட்சத்தில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி, 2024-2025 நிதியாண்டில் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ.30 லட்சத்தில் ஊராட்சிமன்ற அலுவலக கட்டும் பணி, 2024-2025 நிதியாண்டில் நபாா்டு திட்டத்தில் ரூ.44 லட்சத்து ஆயிரம் ரூபாயில் ஒரு லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணி, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடுகள் கட்டும் பணி என பல்வேறு வளா்ச்சித் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளை ஊரக வளா்ச்சித் துறை முதன்மைப் பொறியாளா் சேதுராமன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அதனைத் தொடர்ந்து  திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ 5.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டுமான பணியையும், பல்வேறு வளர்ச்சி பணிகளையும் தலைமை பொறியாளர் சேதுராமன் ஆய்வு செய்தார்

பின்னர் அவர் கூறுகையில், புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டுமான பணியை ஆய்வு செய்தேன், பணிகள் அனைத்தும் தரமாகவும், சரியாகவும் நடைபெற்று வருகிறது.

பணிகளை காலதாமதம் செய்யாமல் விரைந்து முடியுங்கள், ஏனென்றால் விரைவில் மழைக்காலம் ஆரம்பிக்க உள்ளது அப்படி ஆரம்பித்து விட்டால் கட்டுமானபபணிகள் இன்னும் காலதாமதம் ஆகும். அதனால் பணிகளை காலதாமதம் செய்யாமல் விரைந்து முடியுங்கள்,

அதே போல் இதற்கு முன்பு கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டுமான பணிகள் போல் இந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டுமானபணி கிடையாது, இது புது மாதிரியான ஊராட்சி ஒன்றிய அலுவலகம், அதனால் மற்ற ஊராட்சி ஒன்றியத்தை விட இந்த ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுமான பணி மாடலாக அமையும் அதன் பணிகள் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று தலைமை பொறியாளர் சேதுராமன் தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள  பாலூர் , மட்டவெட்டு, கீழ்குப்பம், கடலாடி, சிங்காரவாடி, கோவில்மாதிமங்கலம், ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை மாவட்ட திட்ட இயக்குனர் மணி ஆய்வு மேற்கொண்டு பேசியதாவது

கலசபாக்கத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் அனைத்தும் சரியாகவும் தரமாகவும் நடைபெற்று வருகிறது அதே போல் பணிகளை காலதாமதம் செய்யாமல் விரைந்து முடியுங்கள். அப்படி முடித்தால் அடுத்த வளர்ச்சி பணிகள் வழங்குவதற்கு கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் முன்மாதிரியான ஊராட்சி ஒன்றியமாக மாறி வருகிறது.அத்தனை வளர்ச்சி பணிகளும் குறிப்பிட்ட காலகட்டத்தில் பணிகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது, அதேபோல் பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாகவும் , தரமாகவும் கட்டப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது செயற்பொறியாளா் இளங்கோ, மேற்கு ஆரணி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாபு, ரேணுகோபால், ஊராட்சிமன்ற முன்னாள் தலைவா் வெங்கிடேசன், ஒப்பந்ததாரா் முருகன், ஊராட்சிச் செயலா் சங்கா் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top