Close
மார்ச் 7, 2026 1:26 மணி

சினிமா விமர்சனங்களுக்கு தடை விதிக்க முடியாது: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திரைப்பட விமர்சனங்களுக்குத் தடை விதிக்கக் கோரி தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம் (TFAPA) தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், திரைப்பட விமர்சனங்களுக்குத் தடை விதிக்க முடியாது என்ற அதிரடித் தீர்ப்பை வழங்கினார்.

புதிதாக வெளியாகும் சினிமா படங்கள் குறித்து 3 நாட்கள் ஆன்லைனில் விமர்சனம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் எனக்கூறி தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம் (TFAPA)) சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கூறும் போது

புதிய படங்கள் வெளியாகும் போது, அவை குறித்து ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்வது என்பது பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையாகும். சமூக வலைத்தளங்களில் திரைப்பட தயாரிப்பாளர்கள் நேர்மறையான விமர்சனங்களை மட்டுமே எதிர்பார்க்கக்கூடாது.

சினிமா விமர்சனங்களைத் தடை செய்வது என்பது, பேச்சு சுதந்திரத்திற்கான உரிமையில் தலையிடுவதற்கு சமம், இதை திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் புரிந்து கொள்ள வேண்டும். மனுதாரர்கள் கேட்டுள்ள நிவாரணம் ஏற்க முடியாதது, அதனை நீதிமன்றம் வழங்க முடியாது.

சினிமா தியேட்டர்களுக்கு சவாலாக ஓடிடி தளங்கள் உருவாகி உள்ளது. இதை திரைப்பட தயாரிப்பாளர்கள் தங்களுக்கு தோதாக மறந்துவிட்டது போல் தோன்றுகிறது. புதிய படங்களை வீடுகளில் இருந்து தங்கள் வசதிக்கு ஏற்றபடி பார்க்கும் மக்களின் எண்ணிக்கை மெதுவாக உயர்ந்து கொண்டே வருகிறது

நீதிபதிகள் குறித்தே எதிர்மறையான விமர்சனம் வைக்கப்படும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஏனெனில் சமூக வலைதளங்களில் என்னையும் (நீதிபதி) விமர்சனம் செய்வதை நீங்கள் காண முடியும் .

இன்று யாராலும் எதை குறித்தும் விமர்சனம் செய்ய முடியும். இதனை கட்டுப்படுத்த இயலாது. இங்கு ஒருவரை தடுத்து நிறுத்தினால், மற்றொருவர் வெளிநாட்டில் இருந்து செய்வார். அப்போது என்ன செய்ய முடியும். தயாரிப்பாளர்கள் கோரிக்கைப்படி உத்தரவு போட்டால், அதனை எப்படி செயல்படுத்துவீர்கள். அமல்படுத்த முடியாத உத்தரவை பிறப்பிப்பதில் எனக்கு நம்பிக்கை கிடையாது.

இன்றைய உலகம் சமூக வலைதளங்களின் பிடியில் உள்ளது. சமூக வலைதளங்களில் விமர்சனத்தில் இருந்து தனி நபர்கள்/ அமைப்புகள்/ எந்த நாடும் தப்பிக்க இயலாது. இந்த பிரச்சனைக்கு ஒரே தீர்வு என்பது சமூக வலைதள காலத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான்.

மக்கள், படங்களை பார்த்த பிறகே அது குறித்து முடிவு செய்ய வேண்டும். படங்கள் குறித்து மற்றவர்கள் சொல்வதை வைத்து முடிவு செய்யக்கூடாது  இவ்வாறு தீர்ப்பளித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தயாரிப்பாளர் சங்கத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top