பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலுக்கு வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். மேலும் பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கிரிவலம் சென்று கோவிலில் சாமி தரிசனம் செய்வார்கள்.
வழக்கமாக சனி, ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்கள் மற்றும் விஷேச நாட்களில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும்.
அந்த வகையில் வெளி மாநிலங்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் வரும் பக்தர்களில் ஏராளமானோர் ரயிலில் பயணம் செய்கின்றனர்.
தீபத் திருவிழா மற்றும் பௌர்ணமி நாட்களில் மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
தற்போது பக்தர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் உள்ளதால் தற்போது உள்ள ரயில்கள் போதுமானதாக இல்லை, எனவே திருவண்ணாமலைக்கு தினமும் கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும், திருவண்ணாமலை ரயில் நிலையம் ரயில் முனையமாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை ஆன்மீக பக்தர்களிடமும் பொதுமக்களிடமும் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது.
ரயில் முனையமாக
இந்நிலையில் திருவண்ணாமலை ரயில் நிலையத்தை முனையமாக மாற்ற, தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்கான சாத்தியக்கூறு ஆய்வு பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுவது, பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கையில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், திருவண்ணாமலை ரயில் நிலையத்தை மேம்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காகவே 7.86 கோடி ரூபாய் செலவில், இந்த ரயில் நிலையத்தில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன
இந்த நிலையத்தை முனையமாக மாற்றவும் திட்டமிட்டுள்ளோம். இதற்கான சாத்தியக்கூறு ஆய்வு பணிகள் மேற்கொள்ள உள்ளோம். உரிய ஒப்புதலை பெற்று, ரயில்வே முனையமாக மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த ரயில் நிலையம் முனையமாக மாறினால், இங்கிருந்து பிற நகரங்கள், மாநிலங்களுக்கும் ரயில்களை இயக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்கள்.
திருவண்ணாமலை ரயில் நிலையம் முனையமாக மாற்றப்படும் என்று தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியிருப்பது பக்தர்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.
திருவண்ணாமலை ரயில் நிலையம் முனையமாக மாறுவதற்கு திருவண்ணாமலை, ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசிடம் அழுத்தம் தர வேண்டும் பணிகளை உடனடியாக மத்திய அரசு துவக்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
சென்னை திருவண்ணாமலை ரயில் திட்டம்
பணிகள் துவங்கப்பட்டும் நீண்ட ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்ட திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு திண்டிவனம் வழியாக ரயில்களை இயக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்பது ஆன்மீக பக்தர்கள் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




