திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆனி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு 63 அடி உயரமுள்ள தங்க கொடிமரத்தில் ஆனி பிரம்மோற்சவ கொடியேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஆனிமாத பிரம்மோற்சவ விழாவும் ஒன்று. சூரியன் தெற்கு திசையை நோக்கி நகரும் காலமான (தட்சிணாயனம்) ஆடிமாதத்தை வரவேற்கும் விதமாக ஆனி பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது.
அதன்படி அண்ணாமலையார் கருவறைக்கு முன்பாக உள்ள 63 அடி உயரமுள்ள தங்க கொடி மரத்தின் முன்பு சிவாச்சாரியார்கள் தீபாராதனை காட்டி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.
அப்போது அங்கு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என பக்தி முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். கொடியேற்றம் நடைபெறுவதை முன்னிட்டு அதிகாலையில் கோயிலின் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் மற்றும் பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து முதலில் விநாயகர், அண்ணாமலையார் உடனுறை உண்ணாமலையம்மன் சிறப்பு அலங்காரத்தில் தங்கக் கொடிமரம் அருகில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்துச் சென்றனர்.
இன்று முதல் பத்து நாட்களுக்கு காலையும் மாலையும் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தினால் அலங்கரிக்கப்பட்டு திருக்கோயிலின் நான்கு மாட வீதிகளை சுற்றி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார்கள்.





