திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளுக்கு நடப்பு 2025- 2026 ஆம் ஆண்டு காரீப் பருவத்தில் பிரதம மந்திரி பயிர்க் காப்பீடு திட்டம் செயல்படுத்த அரசாணை பெறப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பயிர்க் காப்பீடு திட்டம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஜெனரல் இன்சுரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனம் மூலம் செயல்படுத்தவுள்ளது. தற்பொழுது காரீப் பருவ (நெல், நிலக்கடலை சாமை, மக்காச்சோளம், கம்பு போன்ற) பயிர்களுக்கு பிரீமியம் தொகை மற்றும் செலுத்தவேண்டிய கடைசி நாள் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி பயிர் காப்பிடு திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு செய்த விவசாயிகள் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பயிர் இழப்பினை ஈடு செய்வதற்கும், இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்பதற்காவும், விவசாயிகள் காரீப் பருவ பயிர்களான நெல், நிலக்கடலை, கம்பு, மக்காச்சோளம் மற்றும் சாமை ஆகிய பயிர்களுக்கும் காப்பீடு செய்து பயன் பெறலாம்.
சொர்ணவாரி நெல் பயிருக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.718 பிரீமியம் தொகையாக செலுத்த வேண்டும். வரும் ஜீலை 15 ஆம் தேதி சொர்ணவாரி நெற்பயிர் காப்பீடு செய்வதற்கு கடைசி தேதியாகும். காரீப்பருவ பயிர்களான நிலக்கடலை பயிருக்கு ரூ.617 ஒரு எக்கர் பிரீமியமாகவும் கம்பு பயிருக்கு ரூ 271 சாமை பயிருக்கு ரூ. 190, மற்றும் மக்காச்சோளம் பயிருக்கு ரூ 473 ம் ஒரு ஏக்கருக்கான பிரீமியமாக செலுத்த வேண்டும்.
நிலக்கடலை, கம்பு ஆகிய பயிர்களுக்கு ஜூலை 31 ஆம் தேதி காப்பீடு செய்வதற்கு கடைசி தேதியாகும் சாமை மற்றும் மக்காச்சோள பயிர்களுக்கு ஆகஸ்ட் 16 ஆம் தேதி காப்பீடு செய்வதற்கு கடைசி தேதியாகும் இத்திட்டத்தில் பயிர் காப்பீடு செய்ய சிட்டா, நடப்பாண்டு பயிர் சாகுபடி அடங்கல், ஆதார் அட்டை வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களுடன் அனைத்து பொது சேவை மையங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளைகளில் பயிர்காப்பீடு பதிவு செய்யலாம்.
மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் க.தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.




