Close
ஏப்ரல் 24, 2026 10:39 காலை

கற்றல், கற்பித்தல் உபகரணங்களுடன் ஆசிரியர்கள் பாடம் நடத்த வேண்டும்: டிஇஓ அறிவுரை..!

கோப்பு படம்

நாமக்கல்:

ஆசிரியர்கள் அனைவரும் தேவையான உபகரணங்களுடன் கற்றல் கற்பித்தல் பணியை திறம்பட மேற்கொண்டால்தின், மாணர்களின் கல்வித்தரம் உயரும் என டிஇஓ கூறினார்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் மெட்ரிக், சுயநிதி, சி.பி.எஸ்.சி., பள்ளி முதல்வர்களுக்கான ஆலோசனை கூட்டம், காவேட்டிப்ப குறிஞ்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) ஜோதி தலைமை வகித்து பேசியதாவது:

கலெக்டரின் அனுமதி பெற்ற பிறகே, பள்ளிகளில் மாணவ, மாணவியர் ஹாஸ்டல்கள் செயல்பட வேண்டும். பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பதிவேடு, மாற்றுச் சான்றிதழ் வழங்கும் பதிவேடு, மதிப்பெண் பட்டியல் வழங்கும் பதிவேடு, தமிழக அரசின் நலத்திட்ட உதவிப் பொருட்கள் வழங்கும் விபர பதிவேடு, இருப்பு பதிவேடு மற்றும் இதர பதிவேடுகளை முறையாக பராமரிக்கவேண்டும்.

சமீபத்தில், கடலூரில் நடந்த பள்ளி வாகன விபத்துபோல், மீண்டும் நடக்காமல் இருக்க, பள்ளி வாகனங்களில் போதிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பள்ளி வாகனங்களில் கட்டாயம் உதவியாளர் நியமிக்க வேண்டும்.

பள்ளி வாகனங்கள் முறையாக எப்.சி. சான்று புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்பதை பள்ளி முதல்வர் ஆய்வு செய்ய வேண்டும். டிரைவர்கள் அனைவரும், ஆண்டுக்கு ஒரு முறை, கட்டாயம் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.

பள்ளி மாணவ, மாணவியருக்கு, புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், போக்சோ சட்டம் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் அனைவரும் கற்றல் கற்பித்தல் பணியை, தகுந்த உபகரணங்களுடன் திறம்பட மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். அவ்வாறு கற்பிக்கும்போதுதான், மாணவருடைய கல்வித் தரம் உயரும். இவ்வாறு அவர் பேசினார்.

தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளர் விவேக், உதவியாளர் கோகுலநாதன், தனியார் பள்ளி முதல்வர்கள், தலைமையாசிரியர்கள் உள்பட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top