திருவண்ணாமலைக்கு அதிக எண்ணிக்கையிலான தினசரி அதிவிரைவு நேரடி ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை மக்களவையில் வலியுறுத்தி பேசினார்.
மக்களவையில் நடந்த கேள்வி நேரத்தின் போது, விதி எண் 377ன் கீழ் திருவண்ணாமலை தொகுதி எம்பி அண்ணாதுரை தெரிவித்ததாவது:
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு விசேஷ நாட்கள், பௌர்ணமி நாட்கள் உள்ளிட்ட நாட்கள் மட்டுமின்றி தற்பொழுது தினந்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகை தருகின்றனர்.
எனவே, திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்கள் வசதிக்காகவும், ஆன்மிக சுற்றுலாப் பயணிகளுக்கான உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை மேம்படுத்தவும், விரைவான போக்குவரத்து வசதிகளையும் மேம்படுத்தவும் வேண்டியது அவசியமாக உள்ளது.
பெங்களூரு, ஐதராபாத் மற்றும் சென்னை ஆகிய நகரங்களை திருவண்ணாமலையுடன் இணைக்கும் வகையில் தினசரி எக்ஸ்பிரஸ் நேரடி ரயில்களையும், சென்னை திருவண்ணாமலை இடையே வந்தே-பாரத் ரயிலையும் உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதன் மூலம், ரயில்வே நிர்வாகத்துக்கு வருவாய் அதிகரிப்பதுடன், திருவண்ணாமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள உள்நாட்டு மற்றும் சர்வதேச பக்தர்களுக்கான ரயில் போக்குவரத்து வசதி மேம்படும்.
மேலும், ஆன்மிக சுற்றுலாத்தலமான திருவண்ணாமலைக்கு வசதிகளை மேம்படுத்துவதன், ஆன்மிக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும். அதன் மூலம் திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள் வளர்ச்சியடையும் என வலியுறுத்தி கூறினார்.
தமிழ்நாட்டில் சுகாதாரத் துறை திட்டங்களின் விவரங்கள்
தொடர்ந்து, தமிழ்நாட்டில் சுகாதாரத் துறை திட்டங்களின் விவரங்கள் என்ன என்று கேள்வி எண் 1008 லும் மற்றும் கேள்வி எண் 937ல் நாடு முழுவதும் குழந்தைகளின் நலன் மற்றும் மறுவாழ்வுக்காக மிஷன் வாத்சல்யா திட்டத்தை அரசு செயல்படுத்துகிறதா? என்று கேள்வி எழுப்பினார்.
கடந்த 3 ஆண்டுகளிலும் நடப்பு ஆண்டிலும் மேற்படி திட்டத்தின் கீழ் மேற்படி மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட, விடுவிக்கப்பட்ட நிதி உதவியின் விவரங்கள், குறிப்பிட்ட காலகட்டத்தில் குறிப்பிட்ட மாநிலத்தில், மாவட்ட வாரியாக திட்டத்தின் கீழ் பயனடைந்த குழந்தைகளின் எண்ணிக்கை மற்றும் மேற்படி மாநிலத்தில் மிஷன் வாத்சல்யாவின் கீழ் ஆதரிக்கப்படும் குழந்தை பராமரிப்பு நிறுவனங்கள் மற்றும் சிறப்பு தத்தெடுப்பு நிறுவனங்களின் எண்ணிக்கை மற்றும் வகைகள் யாவை? என்ற அடுக்கடுக்கான கேள்விகளை திருவண்ணாமலை எம்.பி அண்ணாதுரை நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.




