நாமக்கல் மாவட்டத்திற்கு, நடப்பாண்டிற்கு, ரூ. 21,933.58 கோடி ரூபாய் கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.
நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் 2025-26ம் ஆண்டிற்கான ஆண்டு கடன் திட்ட அறிக்கை வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, மாவட்ட முன்னோடி வங்கியின் மூலம், ரூ. 21,933.58 கோடி மதிபில் கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டு பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்திற்கு, 2025-26ம் ஆண்டுக்கு, விவசாயிகளுக்கு பயிர் கடனாக ரூ. 14,296.78 கோடி, சிறு, குறு நடுத்தர தொழில் கடன் ரூ. 6,916.25 கோடி, கல்வி கடன் ரூ. 45.4 கோடி, வீட்டு கடன் ரூ. 141.74 கோடி மற்றும் இதர கடன்களுக்கு ரூ. 381.08 கோடி என மதிப்பீடு செய்து கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், 202425-ம் ஆண்டில், ரூ. 19,956.23 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, ரூ. 18,002 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட, நடப்பாண்டில் ரூ. 3,931.02 கோடி (21.87 சதவீதம்) அதிகமாக கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற கடன் வசதிகள், விவசாயம், கல்வி, தொழில் உள்ளிட்ட அனைத்திற்கும் உறுதுணையாக இருக்கும். இத்திட்ட அறிக்கையானது, மாவட்டத்தின் கடன் திட்டமிடுதலில் ஒரு அங்கமாக இருந்து, வங்கிகளுக்கு கிளை அளவிலான கடன் குறியீட்டை நிர்ணயம் செய்வதற்கு உதவிகரமாக அமையும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குனர் செல்வராசு, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் மலர்விழி, ரிசர்வ் வங்கி பிரதிநிதி விவேக் ஆனந்த், நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் சுபாஷ், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சகுந்தலா உள்பட பலர் கலந்துகொண்டனர்.




