சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மலையாள புத்தாண்டான சிங்கம் மாத பிறப்பிற்கு முன் கற்கடக மாதத்தில் புதிய நெல்கதிர்கள் வைத்து நிறைபுத்தரி பூஜை செய்து அந்த நெல்கதிர்களை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவார்கள்.
இதேபோல இந்த ஆண்டு நிறைபுத்தரி பூஜை இன்று நடைபெறுகிறது. இதனையொட்டி அச்சன்கோவிலில் உள்ள தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலிருந்து இன்று அதிகாலை 4.45 சபரிமலைக்கு நிறைபுத்தரி நெல்கதிர்களை அலங்கரிக்கப்பட்ட திருவாபரணப்பெட்டி வாகனத்தில் ஏற்றிக் கொண்டு ஊர்வலமாக புறப்பட்டது.
இந்த வாகனம் சபரிமலைக்கு செல்லும் வழியில் செங்கோட்டை அருகே உள்ள புளியரைக்கு வந்தது. அப்போது நெற்கதிர்களை ஏற்றிக் கொண்டு வந்த திருவாபரணப்பெட்டி வாகனத்துக்கு கடையநல்லூர் அதிமுக எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி தலைமையில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட தமிழக ஐயப்ப பக்தர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்கு நடந்த காலை சிற்றுண்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் அந்த வாகனம் கோட்டவாசல்,ஆரியங்காவு, புனலூர் வழியாக சபரிமலைக்கு சென்றது.




