Close
மார்ச் 7, 2026 4:40 மணி

நாமக்கல்லில் தெருக்களில் திரியும் வெறிநாய்களைப் பிடித்து கருணைக்கொலை செய்ய வேண்டும்: மாநகராட்சிக் கூட்டத்தில் திமுக கவுன்சிலர் வேண்டுகோள்

நாமக்கல் மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் மேயர் கலாநிதி பேசினார். அருகில் துணை மேயர் பூபதி, கமிஷனர் சிவக்குமார்.

நாமக்கல் நகரில் திரியும் வெறிநோய் தாக்கிய நாய்களைப் பிடித்து கருனைக்கொலை செய்ய வேண்டும் என மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் திமுக கவுன்சிலர் வேண்டுகோள் விடுத்தார்.

நாமக்கல் மாநகராட்சி கவுன்சில் கூட்டம் மேயர் கலாநிதி தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் பூபதி, கமிஷனர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் விடுத்த கோரிக்கைகள் குறித்த விவரம்:

டி.டி.சரணவன் (16வது வார்டு): நாமக்கல் மாநகராட்சியில் தெருநாய்கள் தொல்லை அதிகம் உள்ளது. இதனால் காலை, மாலை வேளைகளில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர் உள்பட அனைத்து தரப்பு மக்களும் பெரும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். மக்கள் நலன் கருதி வெறிநோய் தாக்கிய தெருநாய்களைப் பிடித்து கருணைக்கொலை செய்ய வேண்டும்.

தமிழக அரசு தொழில் வரி மற்றும் தொழில்முனைவோர் வரி ஆகியவற்றை அறிவித்துள்ளது. இதை குறித்து மாநகராட்சி மூலம் விளக்கமாக அறிவிப்பு வெளியிட வேண்டும்.

மாநகராட்சி பகுதியில், தரமற்ற பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது. மெயின்ரோட்டில் ரூ. 20க்கு பொருட்கள் விற்பனை செய்யும் கடை வந்துள்ளது. அதில் ஏராளமான தரமற்ற பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மாநகராட்சி அதிகாரிகள் கடைகளை சோதனை செய்து தரமற்ற பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வியபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நந்தக்குமார் (9வது வார்டு): நாமக்கல் மாநகராட்சி அலுவலகம் எதிரில் திருச்செங்கோடு மெயின் ரோடு அமைந்துள்ளது. இந்த பகுதியில் வாகனப் போக்குவரத்து அதிகமாக உள்ளதால் விபத்து அபாயத்தை தவிர்க்க மாநகராட்சி அலுவலகம் முன் வேகத்தடை அமைக்க வேண்டும். பல கூட்டங்களில் சொல்லியும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.

இதற்கு பதிலளித்த நகராட்சி அதிகாரிகள், நெடுஞ்சாலைத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அவர்களும் வேகத்தடை அமைத்து தருவதாக உறுதியளித்துள்ளனர். விரைந்து வேகத்தடை அமைக்கப்படும் என தெரிவித்தனர்

ஈஸ்வரன் (38வது வார்டு): 38வது வார்டு கொண்டிசெட்டிப்பட்டி ஏரியில் நிரம்பினால் உபரி நீர் வெளியேற வழியில்லை. அதனால் உபரிநீர் தனியார் நிலங்களில் புகுந்து விடுகிறது. மழைக்காலங்களில் இப்பிரச்சினை ஏற்படுவது தொடர் கதையாக உள்ளது. எனவே மழைக்காலத்திற்கு முன் அப்பகுதியை ஆய்வு செய்து ஏரி உபரி நீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரோஜாரமணி (29வது வார்டு): எனது வார்டுக்கு உட்பட்ட பாரதியார் நகர், காமராஜர் நகர் உள்ளிட்ட பகுதியில் கழிவுநீர் கால்வாய் பிரச்சினை கடந்த ஓராண்டாக நிலவி வருகிறது. பலமுறை இதுபற்றி தெரிவித்தும் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமல் உள்ளது.

இதற்கு பதிலளித்த மாநகராட்சி ஆணையர் அந்த பகுதியை பார்வையிட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

தொடர்ந்து மன்ற கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட 207 தீர்மானங்களும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top