சிதம்பரம், திருவண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 26ஆம் தேதி வருகிறார். சிதம்பரம் நடராஜர் கோயிலில் இருந்து மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி நேரடியாக உரைய உரையாற்றுகிறார். செப்டம்பர் மாத இறுதியிலும் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வரஉள்ளார்.
ஒரு மாத இடைவெளியில் 2வது முறையாக தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி.
பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தமிழகம் வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வருகின்ற ஆகஸ்ட் 26 ஆம் தேதி தமிழகத்துக்கு வருகைதரும் மோடி, திருவண்ணாமலை மற்றும் சிதம்பரம் கோயில்களில் தரிசனம் செய்யவுள்ளார். மேலும், சிதம்பரம் நடராஜர் கோயிலில் இருந்தபடி, நாட்டு மக்களுக்கு மனதின் குரல் நிகழ்ச்சியில் நேரலையில் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இதனையடுத்து, தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் மற்றும் த.வெ.க. உள்ளிட்ட கட்சிகள் அதற்கான அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், ஒரே மாத இடைவெளியில் இரண்டாவது முறையாக தமிழகத்திற்கு வருகை தருவது அரசியல் களத்தில் முக்கியத்துவமும் கவனமும் பெற்றுள்ளது..
முன்னதாக, கடந்த சனிக்கிழமை தமிழகத்துக்கு வருகைதந்த பிரதமர் மோடி, புனரமைக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்துவைத்து, பல்வேறு நலத்திட்டங்களை தொடக்கிவைத்து உரையாற்றினார்.
தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் தரிசனம் செய்து, தமிழகத்தில் சோழர்களுக்கு சிலை அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
இதனிடையே, செப்டம்பர் மாத இறுதியிலும் பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அடுத்தடுத்த பயணங்களை பிரதமர் மோடி மேற்கொள்கிறார் என்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடியின் இந்த வருகைகள், தமிழ்நாட்டு அரசியலில் அவர் கொடுக்கும் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.




