Close
மார்ச் 7, 2026 6:03 மணி

நட்சத்திர கோவில் ஆடி கிருத்திகை விழா: எம்எல்ஏ தலைமையில் ஆலோசனை

எம் எல் ஏ தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம்

கலசபாக்கம் ஶ்ரீவள்ளி தெய்வானை சமேத சுயம்பு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வரும் 16ஆம் தேதி ஆடிக்கிருத்திகையை விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு கலசபாக்கம் தாலுகா அலுவலகத்தில்,ஆலோசனைக் கூட்டம் சரவணன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.

அப்பொழுது அவர் பேசும் போது, வரும் 16ஆம் தேதி ஆடிக்கிருத்திகை அன்று  பக்தர்கள் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு ஏராளமானோர் கலந்து கொள்வார்கள். அதனால் அவர்களுக்கு போதுமான அடிப்படை வசதி அமைத்துக் கொடுக்க வேண்டும்.

அதில் தற்போது உள்ள குடிநீர் வசதியை விட கூடுதலான குடிநீர் வசதி அமைத்துக் கொடுக்க வேண்டும். பக்தர்கள் கிரிவலம் வரும் சாலையில் அனைத்து மின்விளக்கு கம்பங்களிலும் மின்விளக்கு அமைத்துக் கொடுக்க வேண்டும்.

ஆடி கிருத்திகை பண்டிகை என்பதால் அன்னதானம் வழங்குவோர் காவல் துறையில் உரிய முன் அனுமதி பெற்று பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் அன்னதானம் வழங்க வேண்டும்.

இந்த ஆண்டு ஆடி கிருத்திகை பண்டிகைக்கு ஏராளமான பக்தர்கள் வர இருப்பதால் போக்குவரத்து வசதி மூலம் சிறப்பு பேருந்து வசதி அமைத்துக் கொடுக்க வேண்டும்.

காவல்துறை மூலம் பாதுகாப்பு வசதி அதிக அளவு அமைத்துக் கொடுக்க வேண்டும். ஏனென்றால் மக்கள் பாதுகாப்பு மிக அவசியம் அதனால் பாதுகாப்பு வசதி அதிகப்படுத்த வேண்டும். ஏராளமான பக்தர்கள் வருவதால் போளூர் முதல் செங்கம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை யில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் தகுதியான இடத்தை தேர்வு செய்து தற்காலிக பேருந்து நிலையம் அமைத்துக் கொடுக்க வேண்டும்.

பக்தர்கள் நலம் கருதி சுகாதாரத் துறை மூலம் மலை ஏறி செல்லும் வழித்தடங்களில் முன்கூட்டியே மருத்துவ முகாம் அமைக்க வேண்டும். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க திருக்கோயில் மற்றும் கிரிவலம் வரும் பாதைகளில் தற்காலிக கடைகள் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் அமைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் இந்த ஆடிக்கிருத்திகை விழாவில் கரகாட்டம், வான வேடிக்கை, சிறப்பு நாதஸ்வரம் மேளம், போன்ற நிகழ்ச்சிகள் திருக்கோயில் நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவே அது சம்பந்தமாக காவல்துறை மூலம் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

பக்தர்கள் நலன் கருதி தீயணைப்பு துறை மூலம் பாதுகாப்பு அளிக்க வேண்டும், மின்சார துறை மூலம் மின் இணைப்பு துண்டிக்காமல் வழங்க வேண்டும்.

இதுபோன்ற அத்தனை அடிப்படை வசதிகளும் ஆடிக்கிருத்திகை திருவிழாவுக்கு அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று பெ.சு. தி.சரவணன் எம்எல்ஏ கூறினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சிவகுமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வழக்கறிஞர் சுப்பிரமணியம், வட்டாட்சியர் தேன்மொழி, வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன், ஆய்வாளர் நடராஜன், போக்குவரத்து துறை துணை மேலாளர் தியாகராஜன், மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top