Close
மார்ச் 7, 2026 6:04 மணி

பருவத மலையில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பெண்கள் உடல்கள் மீட்பு

தேசிய பேரிடர் மீட்பு படையினருடன் ஆலோசனை மேற்கொண்ட ஆட்சியர்

பருவதமலைக்கு சென்று திரும்பும் போது வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 2 பெண்களின் உடல்கள் மீட்கப்பட்டது. இதில் ஒரு பெண்ணின் உடல் மண்ணில் புதைந்து கிடந்த நிலையில் 5 மணி நேரம் தேடுதல் வேட்டைக்கு பிறகு மீட்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக திருவண்ணாமலை, ஆரணி, வந்தவாசி, கலசப்பாக்கம், போளூர் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகின்றது.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த தென் மகாதேவ மங்கலம் கிராமத்தில் 4,560 அடி உயரமுள்ள பர்வதமலை மீது பழமை வாய்ந்த பிரம்மராம்பிகை அம்மன் உடனுறை மல்லிகா அர்ஜூனேஸ்வரர் கோயில் உள்ளது.

இக்கோயிலில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். அதன்படி, சனிக்கிழமை பௌர்ணமி என்பதால் பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

கடந்த சில நாட்களாக அப்பகுதியில் மழை பெய்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை கனமழை பெய்ததால் பருவதமலை ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்நிலையில், சென்னை திருவேற்காடு பகுதியை சேர்ந்த வடபழனி மனைவி தங்கத்தமிழ், மனோகரன் மனைவி இந்திரா உட்பட 15 பேர் சனிக்கிழமை வேனில் பர்வதமலை கோயிலுக்கு வந்தனர். பின்னர், மலை மீது ஏறிச்சென்று சுவாமி தரிசனம் செய்த அவர்கள் இரவு அங்கேயே தங்கினர்.

தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி அளவில் அனைவரும் கீழே இறங்கி வந்து கொண்டிருந்தனர். அங்கு வீரபத்ர சுவாமி கோயில் மற்றும் பச்சையம்மன் கோயில் இடையே செய்யாற்றில் வெள்ளம் சேரும் ஓடை கால்வாய் அமைந்துள்ளது.

ஜவ்வாது மலையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அந்த ஓடை கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், ஓடையை கடந்து தான் அக்கரைக்கு செல்ல வேண்டும்.

எனவே, அவர்கள் அனைவரும் ஒவ்வொருவராக ஓடை கால்வாயை கடந்து சென்றனர். அப்போது, வெள்ளத்தின் ஓட்டத்தில் நிலை தடுமாறிய தங்கத்தமிழ், இந்திரா ஆகிய இருவரும் அடித்து செல்லப்பட்டனர்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உடன் சென்றவர்கள் அவர்களை மீட்க முயன்றும் முடியவில்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் இருவரும் ஓடை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.

உடனே இதுகுறித்து போளூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ், கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டனர்.

இரவு தேடும் பணி மேற்கொள்ள முடியாத நிலையில் நேற்று காலை 6 மணி முதல் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. வீரனார் கோயில் ஓடையில் இறங்கி உடலை தேடினர். அப்போது அரை கிலோமீட்டர் தொலைவில் இருந்த தடுப்பணை அருகே இந்திராவின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

ஆனால் தங்க தமிழ் உடல் கிடைக்கவில்லை. தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். காலை 10 மணி அளவில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையினர் 30 பேர் தீபக் குமார் தலைமையில் வந்து தனித்தனி குழுக்களாக பிரிந்து காட்டாறு வெள்ளம் செல்லக்கூடிய அந்தப் பாதை மற்றும் அந்த தண்ணீர் சென்று அடையக் கூடிய தென்மகாதேவமங்கலம் ஏரி உள்ளிட்ட இடங்களில் தங்க தமிழ்  உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் வீரனார் கோவிலில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரம் இடைவெளியில் உள்ள நான்காவது செக் டேம் அருகில் மண்ணில் புதைந்தும், செடிகளில் சிக்கிக் கொண்டிருந்த நிலையிலும் கிடந்த தங்க தமிழின் உடலை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டனர்.

அப்போது அந்த இடத்தில் இருந்த தங்க தமிழின் பிள்ளைகளும், உறவினர்களும் கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்கச் செய்தது.

ஓடையின் குறுக்கே பாலம் கட்டப்படாதது ஏன்?

பௌர்ணமி நாளிலும், மறுநாள் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையும் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் வந்ததை கருத்தில் கொண்டும், 4 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்ததால் மலையேறிய பக்தர்கள் கீழே இறங்கி வருவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்ய வனத்துறை தவறி விட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் அந்த ஓடையின் குறுக்கே பாலம் கட்டப்படாதது ஏன்? என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கின்றனர்.

பருவதமலை ஏற தடை

இந்நிலையில் பருவதமலையில் மழை பெய்து வருவதால் காட்டாற்று வெள்ளம் இந்த ஓடை வழியாக செல்வதால் மக்களுக்கு போதுமான பாதுகாப்பு வசதியும் சாலை வசதிகளும் வனத்துறை பகுதியில் இல்லாததால் மக்கள் யாரும் பருவதமலை ஏறுவதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதனால் இயல்பு நிலைக்கு மாறும் வரை பக்தர்கள் யாரும் பருவதமலை ஏற அனுமதிக்க வேண்டாம் என்று தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top