வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்” துவக்க விழா தென்காசி மாவட்டம் மேலகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட நன்னகரம் பகுதியில் நடைபெற்றது.
வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை” இன்று 12.08.2025 செவ்வாய்கிழமை சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பயனாளிகளுக்கு ரேசன் பொருட்களை வழங்கி தொடங்கி வைத்து, தாயுமானவர் திட்ட வாகனங்களின் சேவைகளையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து தென்காசி மாவட்டம் மேலகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட நன்னகரம் பகுதியில் உள்ள நியாய விலை கடையில் தாயுமானவர் திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலை குமார், மேலகரம் பேரூராட்சி மன்ற தலைவர் வேணி வீரபாண்டியன் மற்றும் மேலகரம் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் ஜீவானந்தம் ஆகியோர் குத்து விளக்கேற்றி, பொருட்கள் வழங்கி இத்திட்டத்தினை துவக்கி வைத்தனர்.
அதைத் தொடர்ந்து பயனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று ரேஷன் கடை பணியாளர்களுடன் மாவட்ட ஆட்சியர், எம்.எல்.ஏக்கள் பழனி நாடார், சதன் திருமலைக் குமார் ஆகியோர் ரேஷன் பொருட்களை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். முதல்வரின் இந்த திட்டம் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.




