தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வன சரகத்திற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளான வடகரை, பண்பொழி, வாவாநகரம், சின்ன காடு, திரிகூடபுரம், ஆகிய பகுதிகளில் விவசாயிகள் விவசாய நிலங்களில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் அப்பகுதியில் யானை,கரடி, புலி, பன்றி, மான் போன்ற வனவிலங்குகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
அதேபோல் விவசாய பணிகளுக்கு செல்லும் பணியாளர்கள் மற்றும் விவசாயிகளும் வனவிலங்குகளால் தாக்கப்படும் நிகழ்வு அவ்வப்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்பகுதியில் புலிகளில் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வனவிலங்குகளால் உயிர் சேதம் ஏற்பட்டால் அதற்கு நிவாரணமாக ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என கோரி விவசாயிகள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.




