Close
மார்ச் 7, 2026 7:19 மணி

கணினி பயிற்சி முடித்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் விழா

எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன கிராம அறிவு மையத்தில் கணினி பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா மற்றும் தொழில் முனைவோர்களுக்கான பயிற்சி முகாம் இலுப்பூர் அருகேயுள்ள மேலப்பட்டி கிராம அறிவு மையத்தில் நடைபெற்றது.

நிகழ்விற்கு கிராம அறிவு மைய மேலாண்மை குழுத்தலைவர் க.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மைய முதன்மை விஞ்ஞானி ஆர்.ராஜ்குமார் கணினி மற்றும் தையல் பயிற்சி முடித்த 80 பெண்களுக்கு சான்றிதழ்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

அவர் பேசுகையில், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் கிராம அறிவு மைய செயல்பாடுகளில் ஒன்றாக கணினி பயிற்சி நடத்தி வருகின்றது. மேலப்பட்டி கிராம அறிவு மையத்தில் மட்டும் கடந்த 15 ஆண்டுகளாக தையல் பயிற்சியும் நடைபெற்று வருகின்றது.

இதுவரையில் மேலப்பட்டி கிராம அறிவு மையத்தில் 4800 பேர் கணினி பயிற்சியும், 875 பேர் தையல் பயிற்சியும் முடித்துள்ளார்கள். கணினி மற்றும் தையல் பயிற்சி முடித்தவர்கள் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிவதோடு சுயமாகவும், தொழில் செய்து வருகின்றனர்.

இன்றைய காலக்கட்டத்தில் கணினி மற்றும் டிஜிட்டல் அறிவு மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. கணினி பயிற்சி பெறவேண்டும் என்ற ஆர்வமுள்ள வயது வித்தியாசம் இல்லாமல் யார் வேண்டுமானாலும் இந்த பயிற்சியில் சேரலாம்.

பெண்கள் சுயமாக சம்பாதிக்கவும், சொந்தக்காலில் நிற்கவும் இந்த பயிற்சிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

நிகழ்ச்சியில் நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் தீபக்குமார் பெண்களுக்கான சுய தொழிலாளர்களுக்கான வாய்ப்புகளை விளக்கிப் பேசினார். மேலப்பட்டி கிராம அறிவு மையத்தில் பல்வேறு பெண்கள் தொழில் பயிற்சியை முடித்திருப்பது மிகவும் சிறப்பானது. இந்த மையத்தில் கணினி, தையல் மற்றும் பிறபயிற்சிகளை முடித்தவர்களுக்கான தொழில் வாய்ப்புகளை பல்வேறு அரசுத்துறை உதவிகளுடன் செய்து தர நபார்டு வங்கி தயாராக உள்ளது. பெண்கள் தனியாகவும், கூட்டாகவும் சிறுதொழில்களில் ஈடுபடலாம் என்றார்.

நிகழ்வில் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் பழ.சுப்பையா, ஊராட்சி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, அங்கன்வாடி ஆசிரியை ஜோதிலெட்சுமி, அறிவுமைய மேலாண்மைக் குழு உறுப்பினர் கவிதா, நேரு யுவ கேந்திரா தன்னார்வலர் முத்துமாரி, சமூக பணியாளர் கலையரசி ஆகியோர் பயிற்சி முடித்தவர்களை வாழ்த்திப் பேசினா்.

கிராம அறிவு மையப் பணியாளர் லெட்சுமி அனைவரையும் வரவேற்றார். பயிர் மருத்துவர் பாரதிதாசன் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top