Close
மார்ச் 7, 2026 6:04 மணி

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்: அண்ணாமலையார் கோயிலில் தங்க கவசத்தில் விநாயக பெருமான்

ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய விநாயகர்

விநாயகர் சதுர்த்தி, இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. இது விநாயகப் பெருமானின் பிறந்தநாளைக் குறிக்கிறது. பொதுவாக, இது ஆவணி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இந்நாளன்று, களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் வீடுகளிலும், பொது இடங்களிலும் வைத்து பூஜிக்கப்படுகின்றன.

பல நாட்கள் வழிபாட்டிற்குப் பின், சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு, இறைவன் மீண்டும் பூமிக்குத் திரும்புகிறார் என்பது ஐதீகம். இந்த விழா, மகிழ்ச்சி, ஆன்மிகம் மற்றும் சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாகத் திகழ்கிறது.

விநாயகர் சதுர்த்தி வழிபாட்டுக்கு உகந்த நேரம் நேற்று பகல் 2.22 மணிக்கு தொடங்கி, இன்று மாலை 3.52 மணிக்கு நிறைவு பெறுகிறது. எனவே, அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சம்பந்த விநாயகருக்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறுவது வழக்கம்.

அதன்படி விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு விநாயகருக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அரிசி மாவு, பால், பழம், தேன், தயிர், சந்தனம் உள்ளிட்ட அபிஷேக பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு மலர் மாலை அலங்காரம் செய்து மகா தீபாரதனை நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து உற்சவர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி திருக்கோயிலின் நான்கு மாட வீதிகளைச் சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

மேலும் கோபால் பிள்ளையார் கோயில், கற்பக விநாயகர் கோயில், இரட்டை பிள்ளையார் கோயில் உள்ளிட்ட  விநாயகர் கோயில்களில் விநாயகர் சதுர்த்தி விழா மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது.

பூஜைப் பொருட்கள் விற்பனை

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பூஜை பொருட்கள் வாங்க திருவண்ணாமலை கடைவீதியில் மக்கள் கூட்டம் நேற்றே அலைமோதியது. தேரடி வீதி, கடலைக்கடை சந்திப்பு, சன்னதி தெரு உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் விநாயகர் சதுர்த்திக்கான பூஜைப் பொருட்கள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.

மேலும், களிமண்ணால் வடிவமைக்கப்பட்ட, அழகிய வண்ணம் பூசப்பட்ட சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் ஆயிரக்கணக்கில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. அதேபோல், ஆரணி, செய்யாறு, வந்தவாசி, செங்கம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top