தென்காசி மாவட்டம் மேலகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டு பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதியில் குடிநீரில் விஷ ரசாயனம் கலக்கின்ற நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் மனு அளிப்பதற்காக 20க்கும் மேற்பட்டோர் வருகை தந்தனர். ஆனால் அந்த புகார் மனுவை வாங்க பேரூராட்சி செயல் அலுவலரும், பேரூராட்சி மன்ற தலைவரும் அங்கு இல்லை என கூறப்படுகிறது
இந்த புகார் மனுவில், தங்கள் பகுதியில் சிமெண்ட் சாலை வசதி வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்க வைக்கப்பட்டு வருகிறது, இதேபோன்று வாருகால் வசதி, கழிவுநீரோடை வசதிகள், குடிநீர் வினியோகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்படாமல் இருந்துள்ளது என கூறப்பட்டிருந்தது
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், புகார் மனு அளிக்க வந்த நிலையிலும் பேரூராட்சி செயல் அலுவலரும், பேரூராட்சி மன்ற தலைவரும் எங்கள் மனுவை பெறுவதற்கு கூட அலுவலகத்தில் இல்லாத சூழ்நிலை உள்ளது.
எங்கள் வார்டு முழுமையாக புறக்கணிக்கப்படுவதாக கூறி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கொண்டு வந்த கோரிக்கை மனுவை பேரூராட்சி அலுவலகத்தின் வாசலில் வைத்து சென்றனர்.
மேலும் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டு தங்கள் மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.




