தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட கீழப்புலியூர் பகுதியில் வீரமாமுனிவர் மேல்நிலைப்பள்ளி கடந்த 125 ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வருகிறது. இப்பள்ளி கட்டிடத்தில் அருகில் அரசு புறம்போக்கு நிலம் சுமார் 23 சென்ட் அளவில் காலியாக உள்ள இடம் உள்ளது.
இந்த இடத்தை கடந்த 125 ஆண்டுகளாக பள்ளி மாணவர்கள் விளையாட்டு திடலாக பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் இந்த காலி இடத்தில் நகராட்சி சார்பில் கடந்த ஆண்டு அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணி தொடங்கியபோது பள்ளி நிர்வாகம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது.
அந்த வழக்கில் அரசு புறம்போக்கு இடத்தை அரசு தேவையான திட்டத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என நகர்மன்றத்திற்கு ஆதரவாக நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து அங்கன்வாடி கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.
இந்நிலையில் நகராட்சி சார்பில் அங்கன்வாடி அருகில் இன்று மாலை ரேஷன் கடை கட்டுவதற்காக ஜேசிபி மூலம் குழி தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது பள்ளி அருகில் ரேஷன் கடை கட்ட எதிர்ப்பு தெரிவித்து சுமார் 40-க்கும் மேற்பட்ட பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி தாளாளரும் பங்கு தந்தையுமான ஜேம்ஸ் அடிகளார் தலைமையில் ஆசிரியர்கள் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள்
இதனால் தற்காலிகமாக குழி தோண்டும் பணி கைவிடப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த தென்காசி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பள்ளி நிர்வாகம் தரப்பினரிடம் விசாரணை செய்து வருகின்றனர்




