தமிழகத்தில் வருகின்ற 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
தென்காசி மாவட்டம், தென்காசி நகரப் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கூறுகையில்,
மக்களின் எந்த விதமான அடிப்படை பிரச்சினைகளும் தற்போதை திமுக அரசு தீர்வு காணவில்லை. பல்வேறு திட்டங்கள் மக்களை சென்றடையாமல் உள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எந்தவிதமான மக்கள் நலத்திட்டங்களும் முறையாக செயல்படுத்தப்படுவதில்லை. குறிப்பாக கோவில் கும்பாபிஷேகம் கூட முறையாக பராமரிப்பு பணி மேற்கொள்ளாமல் வெறும் விளம்பரத்திற்காக மட்டுமே கோவில் கும்பாபிஷேகங்கள் நடத்தப்படுகிறது.
தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் முறையான பராமரிப்பு பணி மேற்கொள்ளாமலே கும்பாபிஷேகம் நடத்தி உள்ளது என்று குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைந்தால் மட்டுமே மக்கள் அவர்களை ஏற்பார்கள், இல்லையென்றால் அவர்களை மக்களே புறக்கணித்து விடுவார்கள். ஏனெனில் ஒற்றைக் கட்சி ஆட்சி முறையால் ஊழல் என்பது உச்சகட்டத்திற்கு சென்று விடுகிறது எனவும் தெரிவித்தார்.
மேலும், ஆசிரியர்கள் திறமையானவர்களாக இருந்தால் தான் மாணவர்கள் திறமையானவர்களாக இருப்பார்கள். அவர்களது கற்பிக்கும் திறனை மென்மேலும் வளர்த்தால் தான் மாணவர்களின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்பதால் டெட் தேர்வு என்பது முக்கியமான தேவைதான்.
இருந்தபோதும் அவர்களுக்கு பணி உயர்வுக்கான டெட் தேர்வு வைக்கும் போது கால அவகாசம் வழங்கினால் நன்றாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.




