ரத்த நாளத்தில் ஏற்படும் வீக்கம் அனீரிஸம் எனப்படுகிறது. ரத்த நாளம் பலவீனமடைவதால், அதிலும் குறிப்பாக அது இரண்டாக பிரியும் இடத்தில் இந்த வீக்கம் ஏற்படுகிறது. இந்த பலவீனமான பகுதி வழியாக ரத்தம் பாயும்போது, அந்த அழுத்தம் அந்த பகுதியை வெளிப்புறம் நோக்கி ஒரு பலூன் போல வீங்கச் செய்கிறது.
வீக்கம் உடலில் எந்த நாளத்தில் வேண்டுமானாலும் ஏற்படலாம், ஆனால் அவை பெரும்பாலும் இதயத்திலிருந்து உடலுக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் தமனி மற்றும் மூளை ஆகிய இரண்டு இடங்களில் ஏற்படுகின்றன.
மூளையில் வீக்கம் ஏற்பட்டால் அது மூளை அனீரிஸம் எனப்படுகிறது. மூளை அனீரிஸங்கள் முக்கியமான மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன.
சாக்குலர் அனீரிஸம்: இது பெர்ரி அனீரிஸம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த அனீரிஸம் பார்ப்பதற்கு ஒரு கொடியில் திராட்சை தொங்குவதைப் போல் காட்சியளிக்கிறது. அது முக்கிய தமனி அல்லது அதன் கிளைகளிலிருந்து வளரும் ரத்தம் நிரம்பிய ஒரு வட்டமான பையாகும். இது பெரும்பாலும் மூளையின் அடிப்பகுதியில் உள்ள தமனிகளில் உருவாகிறது. பெர்ரி அனீரிஸம் தான் சாதாரணமாக காணப்படும் அனீரிஸம் வகையாகும்.
ஃப்யுசிஃபார்ம் அனீரிஸம்: இந்த வகையான அனீரிஸத்தில் தமனியை சுற்றி வீக்கம் ஏற்படுகிறது. அதாவது தமனியின் அனைத்துப் பகுதிகளும் வீக்கமடைகின்றன.
மைகாட்டிக் அனீரிஸம்: இந்த அனீரிஸம் ஒரு தொற்றால் ஏற்படுகிறது. மூளையின் தமனிகளை ஒரு தொற்று பாதிக்கும்போது, அது அவற்றின் சுவர்களை பலவீனப்படுத்துகிறது. இது ஒரு அனீரிஸம் உருவாவதற்கு காரணமாக அமையலாம்.
மூளை அனீரிஸத்தின் அறிகுறிகள்
மூளை அனீரிஸம் வெடிக்கும்வரை அதனால் எந்த அபாயமும் ஏற்படுவதில்லை. அப்படி அது வெடித்தால், சப்அரக்னாய்டு ரத்தக்கசிவு என்ற மிகவும் அபாயகரமான நிலை ஏற்படும். இது மூளையில் ரத்தம் பரவ காரணமாக இருக்கிறது. இது மூளையில் பெரிய சேதத்தை ஏற்படுத்தக் கூடும்.
மூளை அனீரிஸம் வெடித்தப்பின் தெரியும் அறிகுறிகள்:
- திடீரென ஏற்படும் தீவிரமான, தாங்கமுடியாத தலைவலி (தலையில் பலமாக அடிபட்டதைப் போல)
- நியுக்கல் ரிஜிடிட்டி எனப்படும் பின்கழுத்து விறைப்பு
- குமட்டல் மற்றும் வாந்தி
- வெளிச்சத்தை பார்க்கும்போது வலி
வெடிக்காத ஒரு மூளை அனீரிஸம், அதிலும் குறிப்பாக சிறியதாக உள்ள அனீரிஸம் பொதுவாக எந்த அறிகுறியையும் காட்டுவதில்லை.
அது பெரியதாக இருந்தால், அது அருகே இருக்கும் நரம்புகள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தி தலைவலி, பார்வையில் மாற்றம் அல்லது முகம் மரத்துப் போதல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தலாம்.
மூளை அனீரிஸம் ஏன் ஏற்படுகிறது?
புகைப்பிடித்தல், உயர் ரத்த அழுத்தம், குடும்பத்தில் மூளை அனீரிஸம் இருக்கும் பரம்பரை காரணங்கள், தலையில் ஏற்பட்ட காயம், மது மற்றும் போதைப்பொருள் பயன்பாடு போன்றவற்றால் மூளை அனீரிஸம் ஏற்படும்
அனீரிஸம் எந்த வயதிலும் ஏற்படலாம், ஆனால் இது 40 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் அதிகமாக காணப்படுகிறது. இவை ஆண்களை விட பெண்களுக்கு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.


