திருவண்ணாமலை பௌர்ணமி நாட்கள் மற்றும் இதர நாட்களில் முக்கிய வீதிகளில் நடப்பதற்கு கூட வழியில்லாமல் நிறுத்தப்படும் ஆட்டோக்களால் கடும் சிரமத்திற்கு உள்ளாவதாக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னிஸ்தலமாக விளங்கக் கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் பௌர்ணமி உள்ளிட்ட நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் திருவண்ணாமலைக்கு வருகை தந்து அண்ணாமலையாரை வழிபட்டு 14 கிலோமீட்டர் கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் வந்து வழிபாடு செய்கின்றனர்.
அதன்படி ஆவணி மாத பௌர்ணமி ஆனது நேற்று ஞாயிற்றுக்கிழமை தினத்தில் நடைபெற்றது. அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர். சமீப காலமாக ஆந்திராவில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருவதால் மேலும் நெரிசல் அதிகரித்து வருகிறது.
விதிமுறைகளை காற்றில் பறக்க விடும் ஆட்டோ ஓட்டுநர்கள்
மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாட்களில் ஆட்டோ ஓட்டுனருக்கு க்யூ ஆர் கோடுடன் கூடிய ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட ஆட்டோக்கள் மட்டுமே பௌர்ணமி உள்ளிட்ட நாட்களில் நகருக்குள் இயக்க அனுமதித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாநகராட்சி தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து பக்தர்களை கோவில் அருகே கொண்டுவரும் ஆட்டோ ஓட்டுநர்கள் சன்னதி தெரு வழியாக கோவில் அருகே வருகை தந்து கோபால் பிள்ளையார் கோவில் ஸ்டேட் பேங்க் வழியாக வெளியே செல்ல வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கூறியிருந்தது
விதிமுறைகளை காற்றில் பறக்க விடும் ஆட்டோ ஓட்டுநர்கள்
சன்னதி தெரு வழியாக பக்தர்களை ஏற்றிக்கொண்டு உள்ளே வரக்கூடிய ஷேர் ஆட்டோக்கள் அதே இடத்தில் நிறுத்தி மீண்டும் சாலை விதிகளை மதிக்காமல் சன்னதி தெரு வழியாகவே பக்தர்களை தற்காலிக பேருந்து நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதால் ஒவ்வொரு பௌர்ணமி நாட்களிலும் சன்னதி தெரு முழுவதும் பக்தர்கள் செல்ல முடியாத அளவிற்கு நீண்ட போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
போக்குவரத்து போலீசார் என எத்தனை போலீஸ் வந்தாலும் ஆட்டோ ஓட்டுநர்கள் சாலை விதிகளை மதிக்காமல், ஒரு ஆட்டோக்களில் 15 முதல் 20 பக்தர்களை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக புறநகர், மாநகராட்சி பகுதிகளில் செல்வதாலும் நடந்து செல்லக்கூடிய பக்தர்கள் மிகுந்த அச்சுறுத்தல் ஏற்படுகிறது.
சன்னதி தெரு வழியாக வரக்கூடிய பக்தர்கள் ராஜகோபுரத்திற்கு வரும் வழி முழுவதும் ஆட்டோ ஓட்டுநர்களின் போக்குவரத்து நெரிசலால் அங்கு ஏற்படக்கூடிய புகை மூட்டத்தால் மிகுந்த அவதிப்படுகின்றனர். அதேபோல் திருமஞ்சன கோபுரம் வழி முழுவதும் ஆட்டோ ஓட்டுனர்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
திருவண்ணாமலையில் முக்கிய சாலைகளான சன்னதி தெரு, குயமட தெரு, சென்னப்பர் தெரு, செட்டி தெரு உள்ளிட்ட தெருக்களில் ஆட்டோ ஓட்டுநர்கள் பக்தர்களை ஆங்காங்கே இறக்கிவிட்டு ஏற்றிச் செல்வதால் அப்பகுதிகளிலும் கடும் போக்குவரத்து ஏற்படுகிறது.
மேலும் அந்த குறுகிய தெருக்களில் ஆட்டோ ஓட்டுநர்கள் மிக வேகமாக செல்வதால் அப்பகுதிகளில் யாரும் நடந்து செல்லவே முடியவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, “ஆன்மிக பூமியான திருவண்ணாமலையில் ஆட்டோக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறுகின்றனர். பௌர்ணமி நாளில் சன்னதி தெரு மட்டுமின்றி அனைத்து வீதிகளையும் ஆட்டோக்கள் ஆக்கிரமித்து கொள்கின்றன.
வீட்டில் இருப்பவர்கள் கூட வெளியே வர முடியாது. பக்தரக்ளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆட்டோக்களை முறைப்படுத்த காவல்துறையினர் இல்லை. ஆட்டோக்களுக்கு கடிவாளம் போட காவல்துறையினர் முன்வர வேண்டும் என்றனர்.
மாவட்ட நிர்வாகம் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பௌர்ணமி மற்றும் வார இறுதி நாட்களில் புறவழிச் சாலை உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் குழுக்கள் அமைத்து ஆட்டோ ஓட்டுநர்களை கண்காணிக்க வேண்டும் சாலை விதிகளை மதிக்காத ஆட்டோக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆன்மீக பக்தர்கள் திருவண்ணாமலை பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.



