திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையில் முகம் கழுவச் சென்ற இளைஞர் முனீஸை முதலை கடித்து இழுத்துச் சென்றதில் அவர் உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில், சாத்தனூர் அணைக்கு அருகிலுள்ள பெரியமலை கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் தனது கால்நடைகளைப் பராமரித்து, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு குடும்பத்தை நடத்தி வருகிறார். கண்ணனிடம் சில மாடுகள் உள்ளன, அவற்றை அவர் அணையை ஒட்டிய வனப்பகுதியிலும், சமவெளி பகுதிகளிலும் மேய்ப்பது வழக்கம்.
இந்நிலையில், கல்லூரி மாணவரான கண்ணனின் மகன் முனீஸ் (18) விடுமுறை தினம் என்பதால் மாடுகளை மேய்க்க அணைக்கு அருகிலுள்ள புல்வெளிக்கு அழைத்துச் சென்றார்.
பின்னர் முனீஸ்வரன் சாத்தனூர் அணை தண்ணீர் தேங்கும் பகுதியான பெரிய மலை வேடியப்பன் கோயில் அருகே கை, கால்களை கழுவுவதற்காக நீரில் இறங்கியுள்ளார். அப்போது, நீரில் மறைந்திருந்த முதலை ஒன்று முனீஸைத் தாக்கி, நீருக்குள் இழுத்துச் சென்றது.
மேய்ச்சலுக்கு சென்ற மகன் காலை உணவுக்கு வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த தந்தை கண்ணன், மகனை தேடி சென்றிருக்கிறார். வழக்கமாக மாடுகளை மேய்ச்சலுக்கு விடும் பகுதியிலிருந்து கொஞ்சம் தூரத்தில் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்திருக்கின்றன. ஆனால் மகனை எங்கு தேடியும் காணவில்லை
அப்போது, நீர்ப்பிடிப்பு பகுதியில் ஒரு சடலம் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அருகில் சென்று பார்த்தபோது, அது தனது மகன் முனீஸின் உடல் என்பதை அறிந்து கதறினார்.
இதையடுத்து, கிராம மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, வனத்துறை மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
விசாரணையில், முனீஸ் நீரில் முகம் கழுவ இறங்கியபோது முதலை தாக்கியதால் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்தது தெரியவந்தது.
பின்னர், காவல்துறையினர் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் பெரியமலை கிராமத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




