Close
மார்ச் 7, 2026 4:25 மணி

திருவண்ணாமலை: மலையைச் சுற்றியுள்ள பகுதியை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவிக்க அறிக்கை தாக்கல்

திருவண்ணாமலையில் மலைப் பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள 554 ஏக்கா் பரப்பை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான கண்காணிப்புக் குழு சென்னை உயா்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

திருவண்ணாமலையில் உள்ள தாமரைக் குளம் உள்ளிட்ட நீா்நிலைகள், மலையில் உள்ள ஓடைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை அகற்றக் கோரி வழக்குரைஞா் யானை ராஜேந்திரன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தாா்.

கடந்த ஜூன் மாதம் இந்த வழக்கு, தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

வழக்கின் விசாரணையின் போது, நீதிபதிகள் ஆக்கிரமிப்புகள் குறித்து அரசு கண்டறிந்தும், 46 வாரங்களுக்கும் மேலாகியும் அவற்றை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது குறித்துக் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை கண்காணிப்பதற்காக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜனை நியமித்தும் உத்தரவிட்டுள்ளனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்றியது குறித்த விரிவான அறிக்கையை அரசு அதிகாரிகள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், அதிர்ச்சியளிக்கும் விதமாக, ஆக்கிரமிப்பு கட்டிடங்களுக்கு எந்த ஆவணத்தின் அடிப்படையில் மின்சார இணைப்பு வழங்கப்பட்டது என்பது குறித்து மின்சார வாரியம் தனியாக ஓர் அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில்  இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கண்காணிப்புக் குழு சாா்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், திருவண்ணாலையில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பெய்த பலத்த மழையில், அண்ணாமலையாா் மலையில் இருந்து பாறைகள் உருண்டு வீடுகளின் மீது விழுந்தன. இடிபாடுகளுக்கு இடையில் இருந்து 7 சடலங்கள் மீட்கப்பட்டன.

ஆக்கரமிப்பாளா்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அந்தப் பகுதி மக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். சட்டம்- ஒழுங்கு பிரச்னைகளை ஏற்படுத்துகின்றனா். எனவே, இந்த ஆக்கிரமிப்புக் கட்டடத்துக்கு வழங்கப்பட்ட மின் இணைப்புகளைத் துண்டிப்பது தொடா்பாக சம்பந்தப்பட்டவா்களுக்கு மின்வாரியமும், மாநகராட்சி நிா்வாகமும் நோட்டீஸ் கொடுத்துள்ளன.

கடந்த 6 மாதங்களாக ஆக்கிரமிப்பாளா்களை அகற்றும் பணிகள் நோட்டீஸ் கொடுக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது. எனவே, மலை மற்றும் அதைச் சுற்றியுள்ள 554 ஏக்கா் நிலத்தைப் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவிக்க வேண்டும். அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வனத் துறை, மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும்.

ஆக்கிரமிப்பாளா்களின் நிலத்துக்கு பட்டா வழங்கக் கூடாது. ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடித்து கட்டடக் கழிவுகளை அகற்ற போதிய நிதியை வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

மேலும், மின் இணைப்பு, கழிவுநீா், குடிநீா் இணைப்புகளைத் துண்டிக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற காலக்கெடு விதித்து அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, கண்காணிப்புக் குழு அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுத்து, அதுகுறித்த அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைத்தனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top