கலசபாக்கம் அடுத்த லாடவரம் ஊராட்சிக்கு உட்பட்ட காளிங்காபுரம் கிராமத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வந்த சாலையை அதே கிராமத்தை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து இரவோடு இரவாக நெல் பயிரிட்டதால் தங்கள் கிராமத்திற்கு செல்ல சாலை வசதி இல்லை என்று கூறி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்க வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
லாடவரம் ஊராட்சியில் உள்ள காளிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் 60 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த சாலையை அதே கிராமத்தை சேர்ந்த ரமேஷ், பூங்காவனம், சிவா ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்த நிலையில் வட்டாட்சியர் எதுவும் நடவடிக்கை எடுக்காததால், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியரிடம் புகார் மனு அளித்தனர்,
புகாரின் அடிப்படையில் வருவாய் கோட்டாட்சியர் விசாரனை செய்து கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக சாலையாக பயன்படுத்தி வந்த இடம் புறம்போக்கு இடம் தான் என்றும், அந்த இடத்தை யாரும் ஆக்கிரமிப்பு செய்ய முடியாது என்று சொல்லி திருப்பி அனுப்பி உள்ளனர்.
ஆனால் ரமேஷ், பூங்காவனம், சிவா ஆகிய 3 பேரும் இணைந்து இரவோடு இரவாக நெல் பயிரிட்டுள்ளனர், இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் செய்வதறியாது திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் புகார் மனு அளித்துள்ளனர்.
இது குறித்து கிராம மக்கள் தெரிவித்ததாவது,
குடிநீர் தொட்டி, 100 நாள் வேலை திட்டம் போன்ற அரசின் திட்டங்கள் எங்கள் கிராமத்தில் உள்ளபோதும், மூன்று தலைமுறையாகப் பயன்படுத்திய சாலையை ஆக்கிரமித்துள்ளது நியாயமற்றது. இந்தச் சாலை இல்லாததால், விவசாய விளைபொருட்களை எடுத்துச் செல்ல முடியவில்லை.
கர்ப்பிணிப் பெண்கள், நோயாளிகளை அவசர காலங்களில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும், பள்ளி செல்லும் மாணவர்களும் சாலை வசதியின்றி பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் என்று வேதனை தெரிவித்தனர்.
மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தங்கள் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை உள்ளிட்ட அனைத்து அடையாள அட்டைகளையும் அவரிடமே ஒப்படைத்துவிடுவோம் என்றும் கிராம மக்கள் தெரிவித்தனர்.
அது மட்டுமில்லாமல், கிராமத்தில் யாராவது இறந்தால் கூட அவர்களை தூக்கி செல்வதற்கு சாலை இல்லை, பள்ளி செல்லும் மாணவர்கள் கூட சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.




