திருவண்ணாமலை கோ- ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் இந்த ஆண்டு விற்பனை இலக்காக 1 கோடியே 25 லட்சம் நிர்ணயம் செய்து தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி விற்பனை துவங்கி உள்ளது.
வாடிக்கையாளர்களை கவரும் வகையில் துவங்கப்பட்டுள்ள இந்த விற்பனையை தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி குத்துவிளக்கு ஏற்றி முதல் விற்பனையை துவக்கி வைத்தார் .
கைத்தறி இரகங்களின் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு ஆண்டு தோறும் பண்டிகை காலங்களில் 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கி வருகிறது. இந்த நிலையில் எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல வண்ணங்களில் வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் பலவித வடிவமைப்புகளில் மென்பட்டு சேலைகள், பருத்தி சேலைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் மற்றும் நவீன காலத்திற்கு உகந்தமான இரகங்கள் தீபாவளி பண்டிகைக்கு குவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கு பாரம்பரியங்களை புதுபிக்கும் விதமாக செட்டிநாடு சேலைகள், கைத்தறி சுங்கடி சேலைகள், சாதா காட்டன் சேலைகள், மதுரை, தஞ்சாவூர் காட்டன் சேலைகள் , பருத்தி மற்றும் பரமக்குடி ஆயிரம் பட்டுசேலைகள், ஈரோடு சாதா டிசைனர் போர்வைகள் பண்டிகைக்காக தெருவிக்கப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கோ- ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தின் மூலம் கடந்த ஆண்டு 96.77 லட்சம் இலக்கை எட்டியது இந்த ஆண்டு விற்பனை இலக்காக 1 கோடியே 25 லட்சம் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக கோ-ஆப்டெக்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த துவக்க விழாவில் மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரை,மாநகராட்சி துணை மேயர் ராஜாங்கம் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.





