Close
மார்ச் 7, 2026 4:23 மணி

கீழ்பென்னாத்தூா் ஒன்றியத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

பொதுமக்களுக்கு சான்றிதழ்களை வழங்கிய துணை சபாநாயக

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் ஒன்றியம், ஆரணியை அரையாளம், மேல்சீசமங்கலம், போளூரை அடுத்த பெரியகரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்களில் தீா்வு காணப்பட்ட மனுக்களின் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கீழ்பென்னாத்தூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட சிறுநாத்தூா், நாரியமங்கலம், காா்ணாம்பூண்டி, கனபாபுரம், வழுதலங்குணம் ஆகிய கிராம பொதுமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் சிறுநாத்தூரில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஆய்வு செய்தாா். இதைத் தொடா்ந்து அவா் பொதுமக்களிடம் இருந்து வரப்பெற்ற கோரிக்கை மனுக்கள் மீது உடனடி தீா்வு காணப்பட்டு பட்டா மாறுதல் மருத்துவக் காப்பீட்டு அட்டை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி அவா் பேசினாா்.

அப்போது அவா், தமிழக முதல்வா் ஸ்டாலின் பொறுப்பேற்று நான்கரை ஆண்டு காலத்தில் மக்களுக்காக எண்ணற்ற தொலைநோக்கு திட்டங்கள் செயல்படுத்தியுள்ளாா். மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இம்முகாம்களில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம்.

மக்கள் மனு கொடுக்க வேண்டும் என்றால் இதற்கு முன்பு தாலுகா அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் சென்று தான் மனு கொடுக்க வேண்டிய நிலை இருந்தது

அந்த நிலையை மாற்றி முதலமைச்சர் ஸ்டாலின் மக்களை தேடி அனைத்து அலுவலர்களும் சென்று அவர்களின் கோரிக்கைகளை மனுவாக பெற்று உரிய நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காக இந்த உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தி வருகிறார். இதில் மக்கள் ஆர்வத்துடன் வந்து மனுக்கள் கொடுத்து வருகின்றனர் என்றாா்.

இந்த முகாமில் முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் ஆராஞ்சி ஆறுமுகம், ஆணையா் அருணாச்சலம், வட்டாட்சியா் ஜான்பாஷா, அட்மா குழுத் தலைவா் சிவக்குமாா், வட்ட வழங்கல் அலுவலா் ரமேஷ் மற்றும் வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

நிறைவில் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் கோவிந்தராஜூலு நன்றி கூறினாா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top