Close
மார்ச் 7, 2026 3:17 மணி

தோ்தலுக்காக நாடகமாடும் எடப்பாடி பழனிசாமி: டிடிவி விமர்சனம்

திருவண்ணாமலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியதாவது:

எடப்பாடி பழனிசாமி தோ்தலுக்காக நாடகமாடி வருகிறாா். பாஜகவால்தான் தனது ஆட்சி காப்பாற்றப்பட்டதாகக் கூறும் அளவுக்கு அவா் பலவீனம் அடைந்துவிட்டாா்.

அதிமுக கூட்டணி பலவீனம் அடைந்துவிட்டதை பாஜக புரிந்துகொள்ள வேண்டும். வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக 15 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெறும். கரூா் துயர சம்பவத்தை வைத்து ஆதாயம் தேட பழனிசாமி முயற்சிக்கிறாா்.

அதிமுகவினரை வைத்து தவெக கொடியை தூக்கிப் பிடிக்கவைத்த செயல் அம்பலமாகியுள்ளது. நடிகா் விஜய் முதல்வராக வேண்டும் என்ற ஆசையில்தான் கட்சியை தொடங்கியுள்ளாா்.

தவெக தலைமையில்தான் கூட்டணி அமையும் என மதுரை மாநாட்டில் விஜய் தெரிவித்தாா். அப்படியெனில், விஜய் தலைமையில் கூட்டணி அமைக்க எடப்பாடி பழனிசாமி தயாராகி விட்டாரா?  என டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பினாா்.

மேலும் தமிழ்நாட்டில் கொடுமையான துயர சம்பவம் கரூரில் நடைபெற்ற 2 வாரம் ஆன சூழ்நிலையில் வீடு பற்றி எரியும் பொழுது சுருட்டுக்கு நெருப்பு கேட்பது போலும், ஆடு நனைகிறதே என ஓநாய் கண்ணீர் விடுவதைப் போல பழனிச்சாமி நடந்து கொள்வது மிகுந்த வருத்தத்திற்குரியது.

எடப்பாடி பழனிச்சாமி சமீபகாலமாக பாஜகவிற்கு ஆதரவாக இருப்பேன் என நரி வேஷம் போடுகிறார். 2024 பாராளுமன்ற தேர்தல் முக்கியமான தேர்தலாக இருந்த பொழுது வெளியே வந்த எடப்பாடி என்னென்ன பேசினார் என்று அனைவரும் அறிந்த ஒன்று. மத்திய பாஜக அரசுக்கு துரோகம் செய்த அவர் தற்பொழுது கூட்டணி வைத்தால் என்ன தவறு என்று கேட்பது, பல்வேறு லாபங்களை பாஜகவில் இருந்து சம்பாதித்த எடப்பாடி ஏன் அக்கட்சியை விட்டு பாராளுமன்ற தேர்தலின் போது வெளியேறினார் என்று கேள்வி எழுப்பினார்.

விஜய் கூட்டணி வந்தால் பாஜகவை கூட கழட்டிவிட தயாராக இருப்பார் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் விஜய் கூட்டணிக்கு வருவாரா? என்பது தெரியவில்லை.

மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற அடிப்படையில் தான் அனைத்து மாநில அரசுகளும் செயல்படும், தமிழ்நாட்டு உரிமைகளை விட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் மாநில அரசு ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு மற்றும் கரூர் வழக்கு சிபிஐக்கு செல்லாமல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாகவும் கூறினார்.

கரூர் சம்பவத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி சதித்திட்டம் தீட்டி இருக்க வாய்ப்பில்லை, தானும் தனது கட்சியும் வெற்றி பெற வேண்டும் என்று அயராது உழைப்பவர் அவர், ஆனால் அதற்காக இதுபோன்ற கொடூர சம்பவத்தில் எல்லாம் அவர் ஈடுபட மாட்டார்.  வருகின்ற 2026 ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது.

டாஸ்மாக் ஊழல் குறித்து எடப்பாடி பழனிச்சாமி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், எடப்பாடி பழனிச்சாமியின் மீது ஊழல் குற்றசாட்டு எவ்வளவோ உள்ளது, இதுபோன்று ஊழல் இருந்தால் எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் நீதிமன்றம் செல்லாமல் ஊர் ஊராக சென்று காட்டுக் கூச்சலிடுவது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top