திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட புகழ் திரையரங்கம் எதிரில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு மாவட்ட பொதுமக்களின் நலன்கருதி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் சார்பில் பட்டாசு விற்பனை துவக்க விழா நடைபெற்றது.
இந்த விழாவுக்கு மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பார்த்திபன் தலைமை தாங்கினார். கோட்டாட்சியர் ராஜ் குமார் துணைப்பதிவாளர் (பொதுவிநியோக திட்டம்) வினோத் ஆகியோர் முன்னிலை வகிக்க மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை மேலாண்மை இயக்குநர் சுரேஷ்குமார் அனைவரையும் வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பட்டாசு விற்பனையை துவக்கி வைத்து பேசியதாவது, தீபாவளி பண்டிகை முன்னிட்டு மாவட்ட பொதுமக்களின் நலன்கருதி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் சார்பில் ரூ.60 லட்சம் மதிப்பில் பட்டாசு வகைகள் கொள்முதல் செய்யப்பட்டு பட்டாசு விற்பனை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதில் ஸ்டாண்டர்டு, இரட்டைகிளி, அரசன், குயில் மற்றும் ஐயன் போன்ற தரமுள்ள நிறுவனங்களிடமிருந்து பட்டாசுகள் கொள்முதல் செய்யப்பட்டது. மக்களின் நலன்கருதி கிப்ட் பாக்ஸ் ரூ.495 முதல் ரூ.2005 வரை விற்பனைக்கு உள்ளது.
மேலும் புதிய வகை பட்டாசுகள் பல விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது. பொது மக்கள் அனைவரும் காலை 6 மணி முதல் 7 மணிவரை மாலை 7 மணிமுதல் இரவு 8 மணிவரை பட்டாசுகள் வெடிக்க வேண்டும் எனவும் மேலும் பட்டாசு வெடித்தல் தொடர்பான அறிவுரைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். என்று கூறினார்
விழாவில் வட்டாட்சியர் மோகனராமன், கண்காணிப்பாளர்கள் கே.மாசிலாமணி, ஏ.கே. மாசிலாமணி, கூட்டுறவு ஒன்றிய உதவியாளர் வெற்றி உள்பட கூட்டுறவு துறை அலுவலர்கள், பண்டக சாலை பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் சிவக்குமார் நன்றி கூறினார்.




