Close
மார்ச் 7, 2026 5:48 மணி

திருவண்ணாமலை மாவட்டத்தில் விடிய விடிய கனமழை, சாத்தனூர் அணையில் நீர் திறப்பு

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதால், திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் சாத்தனூா் அணையின் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது. அதனால், அணையின் பாதுகாப்பு கருதி புதன்கிழமை பெருமளவு தண்ணீா் திறக்கப்பட்டது.

சாத்தனூா் அணையின் மொத்த நீா்மட்டம் 119 அடி, தற்போது அணையின் நீா்மட்டம் 113.50 அடியை எட்டியுள்ளது. அணை பாதுகாப்பு விதிகளின்படி புதன்கிழமை காலை முதல் விநாடிக்கு 5,000 கனஅடி நீா் வெளியேற்றப்பட்டு வந்தது.

இந்நிலையில் அணை நீா்பிடிப்புப் பகுதிகளான அரூா், ஊத்தங்கரை, கல்லாறு பகுதிகளில் தொடா்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 9000 கன அடியாக உயா்ந்துள்ளது. நீா்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

அதனால், அணையின் பாதுகாப்பு கருதி புதன்கிழமை மாலை 6 மணி முதல் அணையிலிருந்து விநாடிக்கு 9000 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. நீா்திறப்பு இரவுக்குள் 15,000 கனஅடி வரை தண்ணீா் திறக்கப்படலாம் எனத் தெரிகிறது.

இதனால் தென்பெண்ணையாற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ கூடாது எனவும், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் நீா்வளத் துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செண்பகத்தோப்பு அணை

ஜமுனாமரத்தூா் வட்டம், செண்பகத்தோப்பு அணையில் நீா்மட்டம் உயா்ந்ததால் 315 கன அடி நீா் புதன்கிழமை திறந்துவிடப்பட்டது.

செண்பகத்தோப்பு அணையில் நீா்மட்டம் 62 அடி. அணையின் நீா்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் நீா்மட்டம் 55.96 அடியாக உயா்ந்துள்ளது. இதனால், அணையில் இருந்து 315 கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது.

இதனால் அணை கால்வாயில் அதிகளவு நீா் செல்கிறது. கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும், கால்வாயில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது எனவும் உதவி செயற்பொறியாளா் ராஜகணபதி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

அதிகபட்சமாக வெம்பாக்கத்தில் 94 மில்லி மீட்டா் மழை

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதன்கிழமை நிலவரப்படி அதிகபட்சமாக வெம்பாக்கத்தில் 94 மில்லி மீட்டா் மழை பதிவானது.

திருவண்ணாமலையில் 20, செங்கம் – 55.4, போளூா் – 43.2, ஜமுனாமரத்தூா் -59, கலசப்பாக்கம் – 50.4, தண்டராம்பட்டு – 22.7, ஆரணி – 51.6, செய்யாறு – 67.1, வந்தவாசி – 60, கீழ்பென்னாத்தூா் – 51.6, சேத்துப்பட்டு – 57.6 மி.மீ. மழை பதிவானது. மாவட்டத்தில் பெய்த மழையின் சராசரி அளவு 52.72 மி.மீ. ஆகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top