திருவண்ணாமலை பகுதியில் மலைச் சரிவிலும் நீர்நிலைகளையும் ஆக்கிரமித்துள்ளவர்களின் பட்டியலை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலையில் உள்ள தாமரைக்கேணி உள்ளிட்ட நீர் நிலைகளையும், மலையில் உள்ள ஓடைகளையும் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை உடனடியாக அகற்றக் கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குகளை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, திருவண்ணாமலை மலையில் ஆக்கிரமிப்பு செய்தவர்களை அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு தொடர்பாக நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என தமிழ்நாடு அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர் யானை ராஜேந்திரன் தரப்பில், மலைச் சரிவில் ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு எதிராக மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஓடைகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளில் ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டது.
மேலும், சிலர் பட்டா இருப்பதாகவும் தெரிவித்துள்ளது குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். மலைப்பகுதிகளிலும், நீர்நிலைகளிலும் ஆக்கிரமித்துள்ளவர்களின் பட்டியலை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 6 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.




