Close
மார்ச் 7, 2026 9:02 மணி

கண்டங்கள் ஏன் பூமியின் ஒரு பக்கத்தில் குவிந்துள்ளன?

புவியின் வரைபடத்தை உற்று நோக்கும்போது, ஒரு விசித்திரமான உண்மையைக் கவனிக்கலாம்: உலகின் பெரும்பாலான நிலப்பரப்புகள் அனைத்தும் ஒரே பக்கத்தில், அதாவது ஆசிய, ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்க கண்டங்கள் குவிந்துள்ளது போல் காட்சியளிக்கின்றன.

அதேசமயம், பூமியின் மறுபக்கத்தில், பசிபிக் பெருங்கடல் மட்டுமே மையமாகக் கொண்ட ஒரு பரந்த நீர்ப்பரப்பைக் காணலாம். இது தற்செயலான அமைப்பா? அல்லது இதற்குப் பின்னால் ஏதேனும் மாபெரும் புவியியல் இரகசியம் உள்ளதா?

உண்மையில், இந்த நிலப்பரப்புகளின் குவியல் என்பது நமது பூகோள வரலாற்றில் உள்ள ஒரு தற்காலிக மற்றும் கட்டாய நிலையாகும். இதற்கான முழுமையான அறிவியல் விளக்கத்தை டெக்டானிக் தட்டுகள் கட்டமைப்பு மற்றும் சூப்பர் காண்டினெண்டல் சுழற்சி ஆகிய கோட்பாடுகளே அளிக்கின்றன.

கண்டப்பெயர்ச்சியின் கோட்பாடு

கண்டங்கள் ஒரே இடத்தில் குவிந்திருப்பதற்கான மூல காரணத்தைப் புரிந்துகொள்ள, நாம் சுமார் 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பின்னோக்கிச் செல்ல வேண்டும். 1912ம் ஆண்டில், ஜெர்மன் வானிலை ஆய்வாளர் ஆல்பிரட் வெஜெனார் என்பவர், கண்டங்களின் வடிவங்களைப் பார்க்கும்போது, அவை ஒரு ஜிக்-ஜா புதிரின் துண்டுகளைப் போல கச்சிதமாகப் பொருந்துவதைக் கண்டார். குறிப்பாக, தென் அமெரிக்காவின் கிழக்குக் கடற்பகுதியும் ஆப்பிரிக்காவின் மேற்குக் கடற்பகுதியும் மிகச் சரியாகப் பொருந்தி இருந்தன .

இதன் அடிப்படையில், அவர் கண்டப்பெயர்ச்சி கோட்பாட்டை முன்வைத்தார். இக்கோட்பாட்டின்படி, ஒரு காலத்தில் பூமியில் உள்ள அனைத்து நிலப்பரப்புகளும் பாங்கேயா என்று அழைக்கப்பட்ட ஒரு ஒற்றை பெருங்கண்டமாக ஒன்றாக இணைந்திருந்தன. இந்த மாபெரும் நிலப்பரப்பைச் சுற்றியிருந்த ஒரே கடல் பன்தாலஸ்ஸா என்று அழைக்கப்பட்டது.

கண்டங்கள் நகர்கின்றன என்பதற்கு வெஜெனார் அளித்த வலுவான ஆதாரங்கள்

  • தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவின் கடலோரப் பகுதிகள் பொருத்தமாய் இருப்பது.
  • இன்று பரந்த கடலால் பிரிக்கப்பட்டுள்ள கண்டங்களில் ஒரே வயதுடைய மற்றும் ஒரே வகையான பாறை அமைப்புகள் காணப்படுகின்றன. உதாரணமாக, அட்லாண்டிக் கடலின் இருபுறமும் உள்ள மலைத் தொடர்களின் தொடர்ச்சி.
  • மெசோஸாரஸ் போன்ற உயிரினங்களின் புதைபடிவங்கள், அவை கடலைக் கடக்க இயலாத போதும், ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இரு கண்டங்களிலும் காணப்படுகின்றன.
  • இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற வெப்பமண்டலப் பகுதிகளில் கண்டறியப்பட்ட பண்டைய பனிப்பாறைப் படிவுகள், அவை ஒரு காலத்தில் தென் துருவத்திற்கு அருகில் பாங்கேயாவின் ஒரு பகுதியாக இருந்தன என்பதை உறுதிப்படுத்துகின்றன.

கண்டங்கள் நகர்கின்றன என்று வெஜெனார்  நிரூபித்தாலும், அந்த நகர்வுக்குக் காரணமான சக்தி என்ன என்பதை அவரால் விளக்க முடியவில்லை. இதற்குப் பிந்தைய காலத்தில்தான், டெக்டானிக் தட்டுக் கட்டமைப்பு என்ற நவீன கோட்பாடு கண்டங்களின் நகர்வுக்கான இயங்குமுறையை முழுமையாக விளக்கியது.

பூமியின் வெளிப்புறப் பகுதி, லித்தோஸ்பியர் எனப்படும் பெரிய மற்றும் சிறிய டெக்டானிக் தட்டுகளால் ஆனது. இந்தக் கடினமான பாறைத் தட்டுகள், திரவ நிலையில் உள்ள அஸ்தினோஸ்பியர் எனப்படும் பூமி மேலோட்டின் மீது மிக மெதுவாக மிதந்து நகர்கின்றன. கண்டங்களும் இந்தத் தட்டுகளின் மீதுதான் உள்ளன.

தட்டுகளை நகர்த்தும் மூன்று முக்கிய சக்திகள்:

  • பூமியின் மையத்தில் இருந்து வரும் வெப்பம், மேலோட்டில் உள்ள பாறைகளைச் சூடாக்குகிறது. சூடான பாறைகள் மேல்நோக்கி எழும்பவும், குளிர்ந்த பாறைகள் கீழ்நோக்கிச் செல்லவும் செய்கின்றன. இந்த சுழலும் வெப்பச்சலன ஓட்டங்களே மேலே உள்ள டெக்டானிக் தட்டுகளைத் தன்னுடன் இழுத்துச் செல்கின்றன.
  • இரண்டு தட்டுகள் மோதும்போது, அடர்த்தியான கடல் மேலோடு மற்ற தட்டின் கீழ் மூழ்கி மேலோட்டிற்குள் செல்கிறது. இந்த மூழ்கும் பகுதி, தட்டின் எஞ்சிய பகுதியை ஈர்ப்பு விசையின் காரணமாகத் தன்னுடன் இழுத்துச் செல்கிறது. இதுவே தட்டு இயக்கத்திற்கான மிகச் சக்திவாய்ந்த விசையாகக் கருதப்படுகிறது.
  • கடலின் நடுவில் உள்ள மலைத்தொடர்களில், புதிய கடல் மேலோடு உருவாவதால், அது பழைய மேலோட்டை விலக்கித் தள்ளி, கண்டங்களின் நகர்வுக்கு உதவுகிறது.

கண்டங்கள் தற்போது ஒரு பக்கத்தில் குவிந்திருப்பதற்குக் காரணமான செயல்பாடு, ஒரு சுழற்சியின் தற்காலிக நிலையே ஆகும். இந்த சுழற்சி சுமார் ஒவ்வொரு 300 முதல் 500 மில்லியன் ஆண்டுகளுக்கு ஒருமுறை மீண்டும் மீண்டும் நிகழ்கிறது.

பாங்கேயா என்ற பெருங்கண்டம் உருவாகி பின்னர் உடைந்தது. மீண்டும் ஒரு புதிய பெருங்கண்டம் உருவாகும்—இதுவே சுழற்சியின் மையக் கருத்து.

பாங்கேயா முதலில் இரண்டு பெரிய துண்டுகளாகப் பிரிந்தது: வடக்கே லாராசியா (வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியா) மற்றும் தெற்கே கோண்ட்வானாலந்து (தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா). இந்தத் துண்டுகளின் தொடர்ச்சியான நகர்வுதான் இன்றைய கண்ட நிலைகளை உருவாக்கியது.

கண்டங்கள் தற்போது குவிந்துள்ளதால், பூமி இரண்டு தனித்துவமான அரைக்கோளங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது:

அட்லாண்டிக் கடலால் பிரிக்கப்பட்ட நிலப்பரப்பு பூமியின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 80% இந்த அரைக்கோளத்தில் உள்ளது..

பூமியின் மறுபக்கத்தில் உள்ள இந்த அரைக்கோளத்தில், நிலப்பரப்புகள் மிகக் குறைவாகவே உள்ளன; இது கிட்டத்தட்ட முழுவதுமாக பசிபிக் பெருங்கடலால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது.

கண்டங்கள் ஒன்றாகக் குவியும்போது, மீதமுள்ள பூமியின் பகுதிகள் ஒரே பெரிய கடலாக மாறிவிடுகின்றன. அந்தப் பெரிய கடல்தான் இன்றுள்ள பசிபிக் பெருங்கடல்.

கண்டங்களின் தற்போதைய நிலை நிரந்தரமானது அல்ல. இந்த சுழற்சி தொடர்ந்துகொண்டே இருக்கிறது. தற்போது, அட்லாண்டிக் பெருங்கடல் விரிவடைந்து வருகிறது; இதனால் ஐரோப்பாவும் ஆப்பிரிக்காவும் அமெரிக்காவிலிருந்து விலகிச் செல்கின்றன.

அதே நேரத்தில், பசிபிக் பெருங்கடலின் விளிம்புகளில் உள்ள டெக்டானிக்  தட்டுகள், பூமியின் மேலோட்டிற்குள் வேகமாக மூழ்கி வருகின்றன. இதன் விளைவாகப் பசிபிக் பெருங்கடல் மெதுவாகச் சுருங்கி வருகிறது.

இந்த இரண்டு எதிர்விசைகளும் இணைந்து, ஒரு நாளில் கண்டங்களை மீண்டும் ஒன்றிணைக்கத் தொடங்கும். விஞ்ஞானக் கணிப்புகளின்படி, அடுத்த 250 மில்லியன் ஆண்டுகளில், கண்டங்கள் மீண்டும் ஒன்றிணைந்து, பாங்கேயா அல்டிமா அல்லது அமாசியா போன்ற ஒரு புதிய மீப்பெருங்கண்டத்தை உருவாக்கும். அப்போது, இன்று நாம் காணும் நிலப்பரப்புகளின் குவியல் மறைந்து, ஒரு புதிய புவியியல் நிலை உருவாகும். மேலும் புவியின் இந்தப் பயணம் இன்னும் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்குத் தொடரப் போகிறது..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top