Close
ஏப்ரல் 23, 2026 6:31 மணி

ரூ. 13.45 லட்சம் மதிப்பிலான ரொக்கம், பரிசுப்பொருள் பறிமுதல்: 4 தொகுதிகளில் அதிமுக, திமுவினர் உள்ளிட்ட 15 பேர் மீது வழக்கு

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம், ப.வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய தொகுதிகளில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக, ரூ. 13.45 லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வைத்திருந்த அதிமுக மற்றும் திமுக பிரமுகர்கள் உள்ளிட்ட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், ப.வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் எடுத்துச்செல்லப்படுகிறதா என்பதை பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 21ம் தேதி, புகாரின்பேரில் சேந்தமங்கலம் தொகுதியில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அதிமுகவைச் சேர்ந்த சிவன், பாலு, சந்திரசேகர் ஆகியோர் வைத்திருந்த மொத்தம் ரூ. 2 லட்சத்து 64 மதிப்புள்ள ரொக்கப்பணம், பரிசுப் பொருட்கள் மற்றும் கூப்பன்களை போலீசார் மற்றும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ப.வேலூர் சட்டசபை தொகுதியில் புகாரின் பேரில், அதிமுக பிரமுகர்கள் தனபால், சதீஷ், ராஜேந்திரன், ரமேஷ் ஆகியோர், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த மொத்தம் 9 லட்சத்த 51 ஆயிரம் மதிப்புள்ள ரொக்கப்பணம், சேலைகள், எவர்சில்வர் பாத்திரங்கள் மற்றும் டோக்கன்களை போலீசார் மற்றும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

திருச்செங்கோடு சட்டசபை தொகுதியில் புகாரின் பேரில், திமுக பிரமுகர்கள் கோபி, சன்முகராஜா ஆகியோர் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த ரொக்கம் ரூ. 90 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

குமாரபாளையம் சட்டசபை தொகுதியில் புகாரின் பேரில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக சுயேட்டை வேட்பாளரின் ஆதரவாளர் கதிர்வேல் என்பவர் வைத்திருந்த ரொக்கப்பணம் ரூ. 28 ஆயிரம் மற்றும் ரூ. 12 ஆயிரம் மதிப்புள்ள 30 சேலைகளை போலீசார் மற்றும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சேந்தமங்கலம், ப.வேலூர், திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையம் ஆகிய 4 தொகுதிகளில், வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த மொத்தம் ரூ. 13 லட்சத்து 45 ஆயிரம் மதிப்புள்ள ரொக்கம் மற்றும் பரிசுப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, இது குறித்து அதிமுக, திமுகவினர் உட்பட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top