Close
ஏப்ரல் 23, 2026 9:47 மணி

வாக்களிக்க சிங்கப்பூரிலிருந்து பறந்து வந்த தமிழர்கள்

தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தங்கள் வாக்குகளைப் பதிவு செய்வதற்காக வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் தாயகம் நோக்கிப் படையெடுத்து வருகின்றனர்.

குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் விமானக் கட்டண உயர்வையும் பொருட்படுத்தாமல் தமிழகம் வந்த வண்ணம் உள்ளனர். சிங்கப்பூரிலிருந்து திருச்சி நோக்கி வந்த இண்டிகோ விமானத்தில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. விமானம் புறப்படுவதற்கு முன் பயணிகளிடம் பேசிய அந்த விமானி, “உங்களில் எத்தனை பேர் தமிழகத் தேர்தலில் வாக்களிக்கச் செல்கிறீர்கள்?” என்று கேட்க,  உடனே, விமானத்தில் இருந்த பெரும்பாலான பயணிகள் உற்சாகத்துடன் கைகளை உயர்த்தி தங்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.

பயணிகளின் இந்த ஆர்வத்தைக் கண்டு நெகிழ்ந்த விமானி, தொடர்ந்து மைக் மூலம் பேசுகையில், “வாக்களிப்பது என்பது வெறும் உரிமை மட்டுமல்ல, அது உங்கள் கடமையும் கூட. உங்களின் ஒரு வாக்குதான் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான தமிழகத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கப் போகிறது. எனவே, அனைவரும் தவறாமல் உங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.

மேலும், அந்த விமானத்தில் முதன்முறையாக வாக்களிக்கச் செல்லும் இளைஞர்கள் சிலரும் கைகளை உயர்த்தித் தங்களின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்த ஆண்டு சட்டசபை தேர்தலில் நடிகர் விஜய் தவெக தொடங்கிப் போட்டியிடுவதால், அவருக்கு ஆதரவாகவும், மாற்றத்தை விரும்பி ஒரு வாக்காளராகவும் வெளிநாடுகளில் வசிக்கும் அவரது ரசிகர்கள் பெரும் அளவில் தமிழகம் வந்து கொண்டிருக்கின்றனர். சொந்தச் செலவிலும், சிலர் விடுமுறை எடுத்தும் ஊர் திரும்புவது இந்தத் தேர்தலின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

விமானி பயணிகளிடம் உரையாடிய இந்தக் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக  பரவி வருகிறது. வேலை நிமித்தமாக வெளிநாடுகளில் இருந்தாலும், விமானக் கட்டணம் பல மடங்கு உயர்ந்திருந்தாலும், தாய்நாட்டின் மீது அக்கறை கொண்டு வாக்களிக்க வரும் தமிழர்களின் செயல் பாராட்டுக்குரியது எனப் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top